செப்டம்பர் 1 முதல் டாடா கார் விலை உயர்வு... ரூ.25,000 வரை அதிகரிக்கிறது!
வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் டாடா கார்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. தனது அனைத்து வகை கார்களின் விலையையும் அதிகபட்சமாக ரூ.25,000 வரை அதிகரிக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்டை பொறுத்து கார்களின் விலை உயர்வில் வேறுபாடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல், டீசல் எரிபொருள் வகை கார்கள் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் கார்களின் விலையும் அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ்தான் முன்னிலையில் இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் கார்களை வாங்குவோருக்கு இது புதிய சுமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு கார்களுக்கும் எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனவே, ஏற்கனவே புக்கிங் செய்தவர்கள் டாடா டீலரை உடனடியாக தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் பெறுவது அவசியமாகிறது. அதேபோன்று, வரும் ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு செப்டம்பர் 1க்கு பிறகு டெலிவிரி எடுத்தால் இந்த விலை பொருந்துமா என்பதையும் வினவுவது அவசியம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், பன்ச், கர்வ், நெக்ஸான், ஹாரியர், சஃபாரி மற்றும் சியாரா ஆகிய ஏராளமான மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், டியாகோ, டிகோர், பன்ச், கர்வ், சியாரா, ஹாரியர் ஆகிய கார்களில் எலெக்ட்ரிக் மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது.
நீங்கள் புதிதாக டாடா கார் வாங்க திட்டமிட்டிருந்தால் உடனடியாக டீலரை தொடர்பு கொண்டு சில விஷயங்களை தெளிவுப்படுத்திக் கொள்வது அவசியம். இந்த விலை உயர்வு என்பது ஏற்கனவே புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா அல்லது டெலிவிரி எடுக்கும் தேதியில் உள்ள விலையின் அடிப்படையில் இருக்குமா என்பது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்தும் தகவல் இல்லை. எனவே, மேற்கண்ட விளக்கத்தை டீலரிடம் பெற்று அதற்கு தக்கவாறு முடிவு செய்துகொள்ளலாம். சில கார் நிறுவனங்கள் மற்றும் டீலர்களில் விலை உயர்வு அமலுக்கு வருவதற்கு முன்பு புக்கிங் செய்தவர்களுக்கு அதே விலையில் கொடுக்கும் உறுதியை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இல்லையெனில், வரும் 31ந் தேதிக்குள் டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால் செய்து கொள்வது அவசியம்.
கடந்த ஜூலை மாத விற்பனைத் தரவுகளின்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் சந்தையில் நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாக மாறி இருக்கிறது. இதனால், அதிக அளவில் விற்பனை செய்யும் நிறுவனம் இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்ற கருத்து எழுந்துள்ளது.
மேலும், செப்டம்பர்- நவம்பர் மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகள் வரும் நிலையில், பலர் புதிய கார் வாங்குவதற்கு திட்டம் போட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த செய்தி சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications