இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு! நைட்டோட நைட்டா புது காரை வாங்க முட்டி மோதும் மக்கள்!
2025-26ம் நிதியாண்டு இன்றுடன் (மார்ச் 31) முடிவடைகிறது. புதிய 2026-27ம் நிதியாண்டு நாளை (ஏப்ரல் 1) பிறக்கிறது. பொதுவாக புதிய நிதியாண்டு பிறக்கும்போது, கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்துவது (Price Hike) வழக்கம். இதன்படி பெரும்பாலான நிறுவனங்களின் கார்கள் (Cars) விலை நாளையில் இருந்து உயரவுள்ளது.
இதன்படி இந்தியாவை சேர்ந்த மிக முக்கியமான கார் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்கள் விலை 0.5 சதவீதம் உயரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களுக்கு, அதாவது பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் சிஎன்ஜி (CNG) மூலம் இயங்க கூடிய வாகனங்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு பொருந்தும்.

ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படும். அவற்றின் விலை உயராது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மட்டுமல்லாது, வர்த்தக வாகனங்களின் (Commercial Vehicles) விலையும் நாளை முதல் உயரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை 1.5 சதவீதம் வரை உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரிசையில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவன கார்களின் விலையும் நாளை முதல் உயரவுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் விலை 2 சதவீதம் வரை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எம்ஜி செலக்ட் (MG Select) மாடல்களான எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster) மற்றும் எம்ஜி எம்9 (MG M9) ஆகிய கார்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது. அதாவது அவை தற்போதைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும். இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் ஆடி (Audi) ஆகிய சொகுசு கார் நிறுவனங்களும், தங்கள் தயாரிப்புகளின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய 2 முன்னணி நிறுவனங்களும் இன்னும் விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் இந்த 2 நிறுவனங்களும் புதிய நிதியாண்டில் கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவே கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுவாக நிதியாண்டின் தொடக்கத்தில் மட்டுமல்லாது, காலண்டர் ஆண்டின் தொடக்கத்திலும் (ஜனவரி 1) கார்களின் விலைகள் உயர்த்தப்படும். இதன்படி கடந்த ஜனவரி மாதம்தான் ஏராளமான நிறுவனங்களின் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தன. இந்த வரிசையில் நாளையில் இருந்து மீண்டும் ஒரு முறை கார்களின் விலை உயரவுள்ளது.
இதற்கு உற்பத்தி செலவு அதிகரிப்பதுதான் மிகவும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இன்றைக்குள் முன்பதிவு செய்து கொள்ளும்பட்சத்தில், விலை உயர்வை தவிர்த்து விட முடியும். அதாவது தற்போதைய விலையிலேயே புதிய காரை வாங்கி கொள்ள முடியும். எனவே புதிய காரை வாங்கவுள்ள வாடிக்கையாளர்கள், இன்றுக்குள் முன்பதிவு செய்து கொள்ளும்பட்சத்தில், விலை உயர்வை தவிர்க்கலாம்.
இதன் காரணமாக தற்போது நிறைய வாடிக்கையாளர்கள் புதிய கார்களை அவசர அவசரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். எனவே நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்திய சந்தையில் கார்களின் விற்பனை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








