டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு எகிறிய டிமாண்ட்... 6 மாதங்களில் 3 மடங்கு அதிகரித்த புக்கிங்!!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவு சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் எங்களது பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சந்தைப் பங்களிப்பு என்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது, என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களில் எலெக்ட்ரிக் கார் சந்தையில் எங்களுக்கும் இரண்டாவது இடத்தில் உள்ள நிறுவனத்திற்கும் இடையிலான பங்கு வித்தியாசம் அதிகரித்துள்ளது. மேலும், எங்களது எலெக்ட்ரிக் கார்களுக்கான புக்கிங் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், எங்களுக்கு இப்போது தேவை என்பதைவிட உற்பத்தி என்பதுதான் சவாலாக மாறி இருக்கிறது. ஏனெனில், தொடர்ந்து செப்டம்பர்- டிசம்பர் இடையிலான பண்டிகை காலத்திலும் இந்த புக்கிங் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
எலெக்ட்ரிக் கார்களுக்கான புக்கிங் அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், அதற்கு ஈடு செய்யும் வகையில் உற்பத்தி திறனையும் டாடா மோட்டார்ஸ் உயர்த்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மாதத்திற்கு சுமார் 9,000 எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்த நிலையில், சமீபத்தில் இந்த எண்ணிக்கை 15,000 என்ற வகையில் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான பண்டிகை காலத்தில் இந்திய கார் சந்தையில் விற்பனை சிறப்பாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் எதிர்பார்க்கிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் கார் சந்தையின் வளர்ச்சி வேகம் தொடரும் என்று அந்நிறுவனம் நம்புகிறது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் பயணிகள் வாகனத் துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சுமார் 46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. ஆனால், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதைவிட அதிகமாக 77 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது E20 பெட்ரோல் குறித்து பல்வேறு சந்தைகளும், விவாதங்களும் எழுந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் கவனம் எலெக்ட்ரிக் கார்கள் பக்கம் திரும்பி இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி மாற்றங்களால் கார்கள் வாங்குவதற்கான செலவு குறைந்திருப்பதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது பன்ச், டியாகோ, டிகோர், நெக்ஸான், கர்வ், சியாரா மற்றும் ஹாரியர் ஆகிய மாடல்களில் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் விற்பனை செய்து வருகிறது. இதில், அனைத்து எலெக்ட்ரிக் மாடல்களும் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக, பன்ச், நெக்ஸான் மற்றும் ஹாரியர் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களாக இருக்கின்றன. குறிப்பாக பன்ச் காரின் விற்பனை சக்கைப் போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Source: PTI


Click it and Unblock the Notifications

