110 லிட்டர் சிஎன்ஜி டேங்க் உடன் டாடாவின் புதிய இண்ட்ரா வி40... எத்தனை பேரது தொழிலை புரட்டி போட போகுதோ...!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று இண்ட்ரா வி40 என்கிற சிறிய அளவிலான புதிய பை-ஃபியுல் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. CNG மற்றும் பெட்ரோலிலும் இயங்கக்கூடிய இரட்டை-எரிபொருள் வாகனமாக இந்த புதிய டாடா வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக பல்வேறு எரிபொருட்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளன. அதில் ஒன்று, CNG ஆகும். இருப்பினும், CNG-ஐ பெறுவது இன்னும் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படாத காரணத்தினால், பெட்ரோல் மற்றும் CNG என இரு எரிபொருட்களிலும் இயங்கக்கூடிய வகையில் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

அந்த வகையில்தான், புதிய டாடா இண்ட்ரா வி40 ஆனது இரு விதமான எரிபொருட்களில் இயங்கக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த வாகனத்தில் சுமார் 110 லிட்டர்கள் கொள்ளளவில் CNG டேங்க் வழங்கப்பட்டுள்ளது. CNG கிடைக்காத பகுதிகளில் பயணம் செய்யும்போது பெட்ரோலை பயன்படுத்தி இந்த வாகனத்தை இயக்கலாம்.
இந்த வாகனத்தின் பின்பக்கத்தில் 2,960மிமீ நீளத்தில் வழங்கப்பட்டுள்ள லோடு பாடியில் அதிகப்பட்சமாக சுமார் 1,525 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை கொண்டுச் செல்லலாம். அதிக அழுத்தம் கொண்ட ஹைட்ராலிக் திரவம் மூலமாக உருவாக்கப்பட்ட உலோகத்தில் அதிவலிமை மிக்கதாக இதன் சேசிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமர்ஷியல் வாகனத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 58 பிஎச்பி மற்றும் 106 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி சேவைகளுக்காக இந்த என்ஜின் அதிக செயல்படுதிறனை வழங்குவதை காட்டிலும், குறைந்த வேகத்திலும் சிறப்பாக செயல்படும் வகையிலும், அதிக மைலேஜை வழங்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் கேபினுக்குள் கார்களை போன்று டிரைவரின் சவுகரியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட கண்ட்ரோல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த வாகனத்தின் அனைத்து நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதில் முக்கியமாக பின்பற்ற வேண்டியது என்னவென்றால், வாகனத்தை விற்பனை செய்ததற்கு பின் வழங்க வேண்டிய சர்வீஸ் & உதிரி பாகங்கள் ஆகும். இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 'சம்பூர்ணா சேவா 2.0' என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய இண்ட்ரா வி40 வாகனத்தின் அறிமுகத்தின் மூலமாக டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனை செய்யப்படும் இவ்வாறான இரட்டை-எரிபொருள் வாகனங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. அவையாவன, ஏஸ் புரோ பை-ஃபியுல், ஏஸ் CNG 2.0, இண்ட்ரா வி20 கோல்டு மற்றும் புதிய இண்ட்ரா வி40 ஆகும்.
இது இல்லாமல், ஏஸ் புரோ இவி, ஏஸ் இவி 1000 மற்றும் இண்ட்ரா இவி பிக்-அப் டிரக் என்கிற எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலமாக, CNG, பை-ஃபியுல் மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் டாடா கமர்ஷியல் வாகனங்களை வாங்கும் சூழல் உள்ளது.


Click it and Unblock the Notifications