மீண்டும் டாடா கார்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்! இந்த மே மாதத்தில் புதுசா மேலும் ஒரு எலெக்ட்ரிக் கார்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலமாக கார்கள் விற்பனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட சுமார் 31% வளர்ச்சியை கண்டுள்ள டாடா மோட்டார்ஸின் கடந்த ஏப்ரல் மாத விற்பனையை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என்பதில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா (Mahindra) மற்றும் ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே 2வது இடத்தை பிடித்து மஹிந்திரா ஆச்சிரியப்படுத்தி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் அதிக கார்களை விற்பனை செய்து அந்த இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 59 ஆயிரத்து 701 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை வெறும் 701 கார்கள் மட்டுமே ஆகும். மீதி, 59 ஆயிரம் டாடா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, கடந்த ஏப்ரலில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகிக்கு அடுத்து டாடா 2வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெறும் 45 ஆயிரத்து 199 கார்களை மட்டுமே உள்நாட்டு சந்தையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரலில் டாடா கார்களின் விற்பனை 30.5% அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 701 டாடா கார்கள் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இது 2025 ஏப்ரலை விட சுமார் 110.5% அதிகமாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் 333 டாடா கார்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இதேபோல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனையும் தொடர்ந்து வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 9 ஆயிரத்து 150 எலெக்ட்ரிக் கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரலில் 5 ஆயிரத்து 318 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், டாடா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 72.1% அதிகரித்துள்ளது.
இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த மே மாதத்தில் புதியதொரு எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் இந்திய கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு டாடா சியரா (Sierra) கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதன் எலெக்ட்ரிக் வெர்சன் 'சியரா இவி' என்கிற பெயரில் இந்த மே மாத மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
500கிமீ-க்கும் அதிகமான ரேஞ்சை வழங்கக் கூடியதாக எதிர்பார்க்கப்படும் இதனை தொடர்ந்து சஃபாரி இவி (Safari EV) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது மட்டுமின்றி, இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் அவின்யா (Avinya) எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா கார்களின் புதிய ஸ்பெஷல் எடிஷனின் அறிமுகங்களையும் வருகிற தீபாவளி பண்டிகை சமயத்தில் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் கடந்த 1 வருடத்திற்கு முன்பு வரையில் கார்கள் விற்பனையில் இடையில் சிறிய சரிவை சந்தித்து வந்தது. இந்த 2026ஆம் ஆண்டு துவங்கிய சமயத்திலும் கூட டாடா கார்கள் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் கார்கள் விற்பனையில் 30.5% முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஆதலால், இதன்பின் டாடா கார்கள் விற்பனைக்கு ஏறுமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications