எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா.. மாருதியால நினைச்சு கூட பார்க்க முடியாது!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் என்று கூறியுவுடன் முதலில் வாடிக்கையாளர்களின் நினைவிற்கு வருவது டாடா மோட்டார்ஸாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்த இந்திய நிறுவனம் தான் இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய சாதனையையும் தற்போது படைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
இந்தியாவில் மூன்று லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனம் என்ற மைல்கல்லை முதலில் எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் என்ன விதமான எலெக்ட்ரிக் காரை வெளியிடலாம் எனத் தலையை சொறிந்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடக்கநிலை முதல் ப்ரீமியம் வரை பல்வேறு பிரிவுகளில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தி வருகிறது.

டிகோர் EV மூலம் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழைந்த டாடா மோட்டார்ஸ், தற்போது டியாகோ EV, பன்ச் EV, நெக்ஸான் EV, கர்வ் EV மற்றும் ஹேரியர் EV என ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த 2026ம் ஆண்டு முடிவதற்குள்ளாகவே, சியரா EV, சஃபாரி EV மற்றும் அவின்யா X என மேலும் மூன்று புதிய எலெக்ட்ரிக கார்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. இதில் அவின்யா X, இதுவரை நாம் டாடாவிடம் பார்த்திராத வகையில் மிகவும் ப்ரீமியமான மற்றும் சொகுசான ஒரு காராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

3 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியிருப்பதுடன், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையின் 38.9 சதவீதம் சந்தைப் பங்குகளைக் கைப்பற்றியும் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். டாடாவைத் தொடர்ந்து எம்ஜி மோட்டார் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த நிறுவனத்திடமும் டாடா அளவிற்கு அதிகளவிலான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் இல்லை.
கடந்த மே மாதம் கூட எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மற்றொரு புதிய மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரே மாதத்தில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது டாடா. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 10,517 கார்களைக் கடந்த மாதம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 85 சதவீதம் விற்பனை உயர்வாகும்.
அதேபோல் மார்ச் 31ம் தேதியன்று நிறைவடைந்த 2026ம் நிதியாண்டில் தான் அதிகபட்சமாக 92,120 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 43 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும். நடப்பு நிதியாண்டில் இந்த விற்பனை அளவு இன்னும் அதிகரித்து புதிய உயரங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஒரே ஆண்டில் 1 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் என்ற விற்பனை அளவை டாடா உட்பட எந்த நிறுவனமும் எட்டியதில்லை. ஆனால் நடப்பாண்டு அல்லது நடப்பு நிதியாண்டில் அந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டாடாவின் ஒட்டுமொத்த பயணிகள் கார் விற்பனையில் எலெக்ட்ரிக் கார்களின் பங்கு 17.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2030ம் ஆண்டிற்குள் இந்த அளவு 30 சதவீதமாக இருக்க டாடா இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய எலெக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் டாடா மோட்டார்ஸ் போன்ற இந்திய நிறுவனம் ஒன்று முன்னணியில் இருப்பது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி தான். மேலும், மாருதி, ஹூண்டாய் போன்ற மற்ற நிறுவங்களே இன்னும் எலெக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் பெரியளவில் கால் பதிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதனை இலகுவாகச் செய்து வருகின்றன.
எரிபொருள் கார்கள் பிரிவில் மஹிந்திராவுடன் இரண்டாவது இடத்திற்கு போட்டியிட்டு வரும் டாடா மோட்டார்ஸ், எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் அந்நிறுவனத்துடன் முதலிடத்திற்குப் போட்டிய வேண்டிய சூழ்நிலை விரைவில் வரலாம். ஆனால் அதற்கு முன்பு புதிய மாடல்களுடன் விற்பனையில் பன்மடங்கு டாடா உயர்ந்திருக்கும் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications