எகிறும் எலெக்ட்ரிக் கார் விற்பனை.. அதிரடி முடிவெடுத்த டாடா மோட்டார்ஸ்
எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வருவதையடுத்து எலெக்ட்ரிக் கார் தயாரிப்பை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது மாதத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்து வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்த அளவை 50 சதவீதம் வரை உயர்த்த, அதாவது 15,000 கார்களாக உயர்த்த டாடா திட்டமிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டியாகோ ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. எரிபொருள், எலெக்ட்ரிக் மற்றும் CNG என பல்வேறு பவர்ட்ரெயின் தேர்வுகளுடனும் இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் டியாகோ EV அதிக கவனம் ஈர்ப்பதாக இருந்தது. முன்பை விட டியாகோ EV-யின் விலையை 1.14 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் வெளியிட்டதோடு, BaaS திட்டத்தையும் டியாகோ EV-க்கு அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்.

BaaS திட்டத்தின் கீழ் டியாகோ EV-யை மிகவும் குறைவாக 4.69 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையிலேயே வெளியிட்டது டாடா. இந்த விலையுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டும் எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகவும் குறைவான விலையைக் கொண்டிருப்பது டியாகோ EV தான். இந்த காரின் அறிமுகத்தைத் தொடர்ந்தே எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை உயர்த்தவும் டாடா திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை வெளியிட்டிருப்பது ஒரு காரணம் என்றால், கடந்த இரண்டு மாதங்களில் முன்பை விட அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை டாடா விற்பனை செய்தததும் இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. தற்போதை டிமாண்டில் 30 சதவீதம் எலெக்ட்ரிக் கார்களாக இருப்பதைத் தொடர்ந்தே அதன் உற்பத்தி அதிகரிக்க டாடா முடிவெடுத்திருக்கிறது.

இதற்கிடையில் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையையும் நாம் மறந்து விட முடியாது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு முதல் மூன்று முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுவிட்டது. இது பெட்ரோல் டீசலுக்கு மட்டுமல்ல CNG-க்கும் சேர்த்துத் தான். இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்த்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயன்பாட்டுச் செலவு குறைவாக இருக்கும் கார்களை நோக்கி மக்கள் நகரத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கிறது டாடா மோட்டார்ஸ்.
அந்த எதிர்பார்ப்பை அடுத்தே மிக மிகக் குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை வெளியிட்டிருப்பதோடு, எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் தங்களது எலெக்ட்ரிக் வாகன விற்பனை 2 முதல் 2.5 மடங்கு உயர்ந்திருப்பதாக டாடா பயணிகள் வாகனப் பிரிவின் நிர்வாக இயக்குநரான சைலேஷ் சந்திராவும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போது டாடாவின் ஒட்டுமொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் கார்களின் பங்கு 15 சதவீதமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், அடுத்த மூன்று அல்லது நான்கு வருடங்களில் இதனை 30 சதவீதமாக உயர்த்த டாடா மோட்டார்ஸ் இலக்கு நிர்ணயித்தருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டாடாவின் மொத்த வருவாயில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு 20 சதவீதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் 'ஃபர்ஸ்ட் மூவர் அட்வான்டேஜ்' என்று ஒன்று உண்டு. ஒரு பிரிவில் முதலில் காலடி எடுத்து வைப்பவர் இதனைப் பெறலாம். எலெக்ட்ரிக் கார் பிரிவில் இப்போது டாடாவிற்கு கிடைத்திருப்பது அது தான். எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அதிக கவனம் பெறாமல் இருக்கும் போதே இந்த்ப பிரிவில் அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டது டாடா.
இப்போது தான் நிறைய வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் தற்போதிருப்பதை விட பல மடங்கு எலெக்ட்ரிக் கார் விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது டாடா மோட்டார்ஸ். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியை உயர்த்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications