எலெக்ட்ரிக் காராக மீண்டும் வருகிறதா டாடா நானோ? டிசைன் பிரிவு தலைவர் சொன்ன தகவல்!
ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பெருமையுடன் உலகையே திரும்பி பார்க்க வைத்த டாடா நானோ கார் மீண்டும் எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது. இதனை டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவர் அஜய் ஜெயின் ஆமோதிக்கும் வகையில் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
டாடா நானோ கார் சந்தைக்கு மீண்டும் கொண்டு வரப்படுமா? என்ற கேள்வி குறித்து ஏபிபி ஆட்டோ லைவ் நேர்காணல் நிகழ்ச்சியில் சில கருத்துக்களை அஜய் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகிற்கு எடுத்துச் சென்றதில் டாடா நானோ உண்மையிலேயே ஒரு புதுமையான கார். நானோ கார் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி அடைவேன். அப்படி வந்தால் அது எலெக்ட்ரிக் காராக இருக்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், புதிய டாடா நானோ கார் உருவாக்கம் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், டாடா நானோ உருவாக்கத்தில் அந்நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவர் அஜய் ஜெயின் ஆவலோடு இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
அவ்வப்போது டாடா நானோ மீண்டும் வருவது குறித்த பேச்சுக்கள் அடிப்பட்டாலும், தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு உயர் அதிகாரியே டாடா நானோவை மீண்டும் பார்க்க ஆவலோடு இருப்பதாக கூறி இருப்பது மீண்டும் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவே பார்க்கலாம்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைந்த ரத்தன் டாடாவின் கனவு கார் திட்டமாக டாடா நானோ உருவாக்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு டாடா நானோ கார் சந்தைக்கு வந்தது. இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு பாதுகாப்பான நான்கு சக்கர வாகனமாகவும், மிக குறைவான விலையில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களுக்கு கார் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்புடன் அறிமுகமானது.
ஆனால், காரின் டிசைன், எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ் போன்றவை வாடிக்கையாளர்களை கவரவில்லை. எதிர்பார்த்தது போன்று பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கவும் தவறியது. மேலும், மலிவு விலை கார் என்ற பிம்பமும் கார் வாங்குவோரின் அந்தஸ்தை பாதிக்கும் விஷயமாக மாறியது.
இதனால், டாடா நானோ காரின் வாழ்க்கை சக்கரம் அஸ்தமனத்தை நோக்கி விரைவாக நகர துவங்கியது. பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதுடன், புதிய கார் மாடல்களின் உற்பத்திக்கு வழிவிடும் வகையில், கடந்த 2020ம் ஆண்டு சந்தையிலிருந்து டாடா நானோ கார் அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், நகர்ப்புற போக்குவரத்தில் சிறிய வகை எலெக்ட்ரிக் கார்களுக்கு குறிப்பிட்ட அளவு வரவேற்பு இருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு புதிய டிசைன், அதிக சிறப்பம்சங்களுடன் மின்சார கார் அவதாரத்தில் டாடா நானோ கார் வந்தால் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே தொனியில்தான் டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவு தலைவரும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முன்னணியில் உள்ளது. டாடா டியாகோ, பன்ச் இவி, நெக்ஸான் இவி, கர்வ் இவி, ஹாரியர் இவி மற்றும் சியாரா இவி மாடல்கள் மூலமாக சந்தையில் கலக்கி வருகிறது. இந்த நிலையில், மிக குறைவான விலையில் டாடா நானோ எலெக்ட்ரிக் காரை கொண்டு வந்தால் நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்றதாகவும், தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாகவும் மாறும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications