5 ஆண்டுகளுக்குள் 8 லட்சம் கார்கள்.. டாடா பன்ச் கார் இவ்வளவு ஹிட் ஆனதற்கு என்ன காரணம்?
இந்தியாவின் மைக்ரோ எஸ்யூவி என்ற சிறிய கார் பிரிவில் டாடா பன்ச் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. மாத விற்பனையில் தொடர்ந்து கலக்கலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் டாடா பன்ச் கார் தற்போது ஒட்டுமொத்தமான விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் வெறும் 5 ஆண்டுகளுக்குள் 8 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்த சாதனையை எட்டிய எஸ்யூவிகளில் ஒன்று என்ற பெருமையை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள விற்பனைத் தரவுகளின்படி, கடந்த மாதம் முதலாவது வாரத்தில் 8 லட்சம் என்ற புதிய விற்பனை மைல்கல்லை பன்ச் கார் எட்டி இருக்கிறது. மேலும், 7 லட்சம் விற்பனை எண்ணிக்கையிலிருந்து 8 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை எட்டுவதற்கு வெறும் 5 மாதங்களே இந்த கார் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஜூலை மாத விற்பனையின்படி, டாடா பன்ச் கார் 5வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. கடந்த மாதத்தில் 21,313 பன்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், கடந்த ஆண்டு ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது விற்பனை 10,500 யூனிட்டுகளாக விற்பனை செய்து இரட்டிப்பாகி உள்ளது.
அதுமட்டுமல்ல, நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 61,701 டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக, நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் அதிகம் விற்பனையான கார் மாடல்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா பன்ச் காரின் விற்பனை கொடி கட்டி பறக்கத் துவங்கியுள்ளதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம்.
அதன்படி, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. புதுப்பொலிவுடன் கூடிய வெளிப்புற வடிவமைப்பு, மேம்பட்ட இன்டீரியர், கூடுதல் வசதிகளுடன் வந்த இந்த மாடல் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், சிஎன்ஜி எரிபொருள் தேர்வு, ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பன்ச் எலெக்ட்ரிக் கார் மாடலும் வலு சேர்த்து வருகின்றன. பட்ஜெட் எஸ்யூவியில் பெட்ரோல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் என தேர்வு மூன்று தேர்வுகள் கிடைப்பதும் முக்கிய விஷயமாக கூறலாம்.

அடுத்து டாடா பன்ச் காரின் விற்பனையில் அதன் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்புத் தர மதிப்பீடும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதாவது, இந்த கார் குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி மோதல் சோதனைகளில் அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது. தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால், இந்த பாதுகாப்பு மோதல் சோதனை முடிவுகளும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்ரி, இந்திய சாலை நிலைகளுக்கு தக்கவாறு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், கிராஷ் டெஸ்ட்டில் 5 நடத்திர மதிப்பீடு, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளையும் பெற்றிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்புடைய தேர்வாக இருக்கிறது. மேலும், ஏறி, இறங்குவதற்கு வசதியாக 90 டிகிரி கோணத்தில் திறக்கும் கதவுகள் உள்ளிட்டவை முதல்முறை கார் வாங்குவோருக்கு சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.
பன்ச் காரின் வெற்றிக்கு அதன் சரியான விலையும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆம், வடிவமைப்பு, வசதிகள், இடவசதி போன்ற அனைத்திலும் மிக மிக குறைவான பட்ஜெட்டில் எஸ்யூவி போன்ற அனுபவத்தை வழங்கும் மைக்ரோ எஸ்யூவி அம்சங்களை தருவதுடன் இந்த கார் சென்னையில் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.70 லட்சத்தில் தொடங்குகிறது. இவை அனைத்தும் டாடா பன்ச் காரின் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications