டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கு இப்படியோரு டிமான்ட்டா?... 8 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட்!!
டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் சில வேரியண்ட்டுகளுக்கு டிமான்ட் எகிடுதகிடாக அதிகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட வேரியண்ட்டுகளை இப்போது புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் 8 மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து, டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக E20 பெட்ரோல் எஞ்சினில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற சந்தேகமும், கவலையும் எழுந்துள்ளது. இதனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் வாடிக்கையாளர் கவனம் திரும்பி உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ள தகவல் இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு குறித்து அவர் கூறுகையில்,"கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு தற்போது 3 முதல் 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. திடீரென அதிகரித்து வரும் தேவையை சமாளிப்பது சவாலான விஷயமாக உள்ளது," என்று கூறி இருக்கிறார்.
இவர் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்துள்ளதாக பல வாடிக்கையாளர்கள் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பான பதிவு ஒன்றில், டாடா பன்ச் எலெக்ட்ரிக் மாடலுக்கு 4 முதல் 6 மாதங்கள் வெயிட்டிங் பீரியட் உள்ளது. இது உண்மையான வெயிட்டிங் பீரியடா அல்லது சப்ளை தொடர்பான பிரச்னை என்று அந்த பதிவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மற்றொருவரின் பதிவில், பன்ச் எலெக்ட்ரிக் காருக்கு எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்ற சரியான தகவல் டீலரிலிருந்து கிடைக்கவில்லை. ஆனால், 3 மாதங்கள் ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், டாடா டியாகோ எலெக்ட்ரிக் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிக விசாரணைகள் செய்து வருவதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
டீலர்கள் மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, சில பன்ச் எலெக்ட்ரிக் வேரியண்ட்டுகளுக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரி சைலேஷ் சந்திரா கூறியுள்ளதை கவனத்தில்கொள்ளும் போது, புக்கிங் திடீரென அதிகரித்து வருவாத்ல, அதற்கு ஏற்ற அளவில் சப்ளை செய்வதில் சவால்கள் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், நகரங்கள், டீலர்கள், வேரியண்ட்டுகள் மற்றும் வண்ணத் தேர்வுகளை பொறுத்து இந்த காத்திருப்பு காலம் மாறுபடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

தற்போது மாதத்திற்கு 9,000 எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வந்த டாடா மோட்டார்ஸ், அதனை 15,000 யூனிட்டுகள் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இருப்பினும், பண்டிகை காலத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், காத்திருப்பு காலம் மேலும் உயருமா என்ற கவலை வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த பிப்ரவரி மாதம் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பேட்டரி, ரேஞ்ச் மற்றும் வசதிகளில் கூடுதல் அம்சங்களுடன் மாற்றங்களுடன் வந்தது. குறைவான பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கு பன்ச் எலெக்ட்ரிக் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது.
டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில் 30kWh மற்றும் 40kWh என இரண்டு விதமான பேட்டரி பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இதில், 40kWh பேட்டரி பேக் மாடலானது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 468 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று அராய் சோதனை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த கார் 5 வேரியண்ட்டுகளில் ரூ.9.69 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. இதனால், வரும் பண்டிகை காலத்தில் பன்ச் எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
