மீண்டும் விற்பனைக்கு வருகிறது டாடா சுமோ! 90களில் பிரபலமா இருந்த எல்லா காரும் ஒவ்வொன்னா மறுபடியும் லான்ச் ஆகுது
இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தனது கார்களை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு டாடா சஃபாரி (Tata Safari) ஒரு உதாரணம். டாடா சஃபாரி கார் கடந்த 1998ம் ஆண்டுதான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுதான் இந்தியாவின் முதல் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட பிரீமியம் 4 வீல் டிரைவ் எஸ்யூவி ரக கார் ஆகும். சுமார் 21 ஆண்டுகள் விற்பனையில் இருந்த நிலையில், டாடா சஃபாரி காரின் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு நிறுத்தி விட்டது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள்தான் இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது.

இந்த விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதால்தான், டாடா சஃபாரி காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும் கடந்த 2021ம் ஆண்டிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது. இம்முறை விதிமுறைகளுக்கு ஏற்ப டாடா சஃபாரி கார் அப்டேட் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல் டாடா சியரா (Tata Sierra) காரும் தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா சியரா கார் கடந்த 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. சுமார் 12 ஆண்டுகள் என குறுகிய காலமே விற்பனையில் இருந்தாலும், இந்த எஸ்யூவி ரக காரும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில் டாடா சியரா கார் வெறும் 3 டோர்களை மட்டுமே கொண்டிருந்தது. இதன் காரணமாக நடைமுறை பயன்பாட்டில் வாடிக்கையாளர்கள் ஒரு சில சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால் விற்பனை மந்தமாக தொடங்கியதை அடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2003ம் ஆண்டு விற்பனையை நிறுத்தியது.
இருப்பினும் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது கடந்த 2025ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இம்முறை டாடா சியரா கார் 5 டோர்களை கொண்டுள்ளது. எனவே புதிய டாடா சியரா காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டாடா சியரா காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வெற்றி காரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றொரு 'ஐகானிக்' காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது டாடா சுமோ (Tata Sumo) ஆகும்.
டாடா சுமோ காரானது, கடந்த 1994ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு வரை டாடா சுமோ கார் விற்பனை செய்யப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் டாடா சுமோ கார் விற்பனையில் இருந்தது. இதன் மூலம் மிக நீண்ட காலம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார் என்ற பெருமை சுமோவிற்கு உண்டு.
அப்படிப்பட்ட ஒரு காரைதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில் புதிய தலைமுறை டாடா சுமோ கார் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சுமோ போன்ற தனித்துவமான கார்கள் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும். டாடா சுமோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், புதிய டாடா சியராவை விட அதிக வரவேற்பு கிடைக்கலாம் எனவும் நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications