டாடா மோட்டார்ஸை தூக்கி கடாசிய மாருதி சுஸூகி.. மீண்டும், மீண்டுமா!
மே 2026, இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு மற்றுமொரு சிறப்பான மாதம் என்றே கூற வேண்டும். கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது அனைத்து கார்களின் விற்பனையும் நன்றாகவே உயர்ந்திருக்கின்றன. அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 25 கார்களின் விற்பனை அளவை மட்டும் எடுத்துக் கொண்டால், கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது கடந்த மே மாதம் 37 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இதில் ஆச்சரியமளிக்காத ஒரு தகவல் என்னவென்றால், வழக்கம் போல இந்த முறையும் மாருதி தான் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. ஆனால் முதல் மூன்று இடங்களில் ஒன்றிலாவது வேறு நிறுவனங்களின் கார்கள் வந்து விடும். இந்த முறை முதல் மூன்று இடங்களிலுமே மாருதியின் கார்கள் தான் இடம் பிடித்துள்ளன. முதலிடத்தில் 24,546 யூனிட்டுகள் விற்பனையுடன் டிசையர் இருக்கிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இதன் விற்பனை 35 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் ஃபிராங்க்ஸ் மற்றும் எர்டிகா கார்கள் உள்ளன. இரண்டு கார்களும் முறையே 20,686 மற்றும் 20,350 யூனிட்டுகள் வரை கடந்த மே மாதம் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன. ஃபிராங்க்ஸின் விற்பனை கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 52 சதவீதமும், எர்டிகாவின் விற்பனை 26 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.
அடுத்த இரண்டு இடங்களில் பன்ச் மற்றும் நெக்சான் ஆகிய இரண்டு டாடா கார்கள் இருக்கின்றன. இவை இரண்டும் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன. பன்ச் காரானது 20,208 யூனிட்டுகளும், நெக்ஸான் எஸ்யூவியானது 19,100 யூனிட்டுகளும் கடந்த மே மாதம் விற்பனையாகியிருக்கிறது. 2025 மே மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த இரண்டு கார்களின் விற்பனையும் முறையே 54 சதவீதம் மற்றும் 46 சதவீதம் வரை உயர்ந்திருக்கின்றன.

அடுத்த மூன்று இடங்களில் மீண்டும் மாருதியின் கார்கள் தான். பெலினோ, வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய மூன்று ஹேட்ச்பேக்குகளும் முறையே 18,396 யூனிட்டுகள், 18,076 யூனிட்டுகள் மற்றும் 17,519 யூனிட்டுகள் விற்பனையுடன் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களைப் பிடித்திருக்கின்றன. பெலினோவின் விற்பனையே அதிகபட்சமாக 58 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்டின் விற்பனை 29 சதவீதம் மற்றும் 24 சதவீதம் வரையே உயர்ந்துள்ளது.
கடைசி இரண்டு இடங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய எஸ்யூவிக்கள் உள்ளன. ஸ்கார்பியோ எஸ்யூவியின் விற்பனையானது 9 சதவீதம் உயர்ந்து 15,774 யூனிட்டுகளாகவும், கிரெட்டாவின் விற்பனை 2.64 சதவீதம் உயர்ந்து 15,253 யூனிட்டுகளாகவும் உள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் விதவிதமாக கார்களை விற்பனை செய்திருப்பது மாருதி மட்டுமே. மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் எஸ்யூவிக்களே பெரும்பான்மை விற்பனையைக் கொண்டு வருகின்றன.
டாப் 10 இடங்களில் மாருதியின் மூன்று ஹேட்ச்பேக்குகள், ஒரு எம்பிவி, ஒரு எஸ்யூவி மற்றும் ஒரு செடான் கார்கள் உள்ளன. மற்ற நான்கு மாற்று நிறுவனத்தின் கார்கள் அனைத்துமே எஸ்யூவிக்கள் தான். இந்தியாவில் எஸ்யூவிக்கள் மட்டுமே முழுமையாக ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்கு மாருதியே முக்கியக் காரணமாக இருப்பதாகவே தெரிகிறது.
டாப் 25 இடங்களை எடுத்துக் கொண்டாலும் இந்த நிலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 25 கார்களில் 17 எஸ்யூவிக்கள் தான். டொயோட்டாவைத் தவிர்த்து மற்ற அனைத்து நிறுவனங்களின் எஸ்யூவிக்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. டொயோட்டா நிறுவனத்திற்கு மட்டுமே இன்னோவா எம்பிவியும் இருக்கிறது. இதனைத் தவிர்த்து மாருதியின் வேன் ஒன்றும், ஹேட்ச்பேக்கும் ஒன்றும் கூடுதலாக இணைகிறது, அவ்வளவு தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவிக்கள் கண்மூடித்தனமாக இந்திய ஆட்டோமொபைல சந்தையை ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் மாருதியின் கார்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களும் கூட குறைவான விலையில் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் மாருதியின் குறைவான விலை கார்கள் அளவிற்கு மற்ற நிறுவனங்களின் பிற வகை கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கத் தயங்குகின்றனர். இது மாருதியின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications