சுஸூகி e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்சு இது தான்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஒவ்வொரு மாதமும் முன்பை விட அதிகரித்து வருகிறது. அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுமே எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை, குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்படி சுஸூகி (Suzuki) நிறுவனம் இந்தியாவில் வெளியிட்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தான் e-அக்சஸ் (e-Access).
ஏற்கனவே அக்சஸ் என்ற பெயரில் எரிபொருள் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனை செய்து வருவதால், வாடிக்கையாளர்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் என அதே பெயரிலேயே (e-அக்சஸ்) தங்களது புதிய மற்றும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் வெளியிட்டது. கடந்தாண்டே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாலும், பல்வேறு காரணங்களின் காரணமாக இந்தாண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் தான் இந்த e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் அதிகமாக 1.88 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இதனை இந்தியாவில் வெளியிட்டது சுஸூகி. விலைக்கும், ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களுக்கும் சம்பந்தமே இல்லாத வகையில், 3.072 kWh பேட்டரி பேக்கை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருந்தது. விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் பெரிய பேட்டரி பேக்குடன் அதிகளவிலான ரேஞ்சைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மிகவும் சிறிய 3 kWh பேட்டரி பேக்கையே இந்த ஸ்கூட்டரில் சுஸூகி கொடுத்திருந்தது. இத்துடன் 5.5 hp பவர் மற்றும் 14 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சுஸூகி கொடுத்திருந்தது. இந்தப் பவர்ட்ரெயின் செட்டப்புடன் 95 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது சுஸூகி.

தற்போது அதன் உண்மையான ரேஞ்சு குறித்த விவரம் நமக்குத் தெரிய வந்திருக்கிறது. எப்போதும் சான்றளிக்கப்பட்ட ரேஞ்சில் இருந்து நிஜ உலகில் நாம் பயன்படுத்தும் போது கிடைக்கும் உண்மையான ரேஞ்சு மிகவும் குறைவானதாகவே இருக்கும். அதற்குக் காரணம் ரேஞ்சு சான்றுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் நிறுவனங்கள், எந்த வித இடையூறுகளும் இல்லாத வகையிலேயே அதனை சோதனை செய்யும்.
ஆனால் தினசரி நாம் பயன்படுத்தும் போது, டிராஃபிக், மோசமான சாலைகள், பயன்படுத்தும் விதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மாறுபடும். இதன் காரணமாக தினசரி நாம் பயன்படுத்தும் போது கிடைக்கும் ரேஞ்சின் அளவும் சற்று குறைவாக இருக்கும். அந்த வகையில் சுஸூகியின் e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 70 கிமீ முதல் 75 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் என தற்போது தெரிய வந்திருக்கிறது.
1.88 லட்சம் ரூபாய் என்ற விலைக்கு இந்த ரேஞ்சு மிக மிகக் குறைவு. நகரப் பயன்பாட்டை மையப்படுத்தியே இந்த e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சுஸூகி. அதனால் குறைவான ரேஞ்சைக் கொண்டிருப்பது பிரச்சினையில்லை, ஆனால் அதற்கு இவ்வளவு அதிக விலையை நிர்ணயித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
1 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டது. 1 லட்சம் ரூபாய் விலையில் வெளியாகியிருந்தாலும், மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் கடுமையான போட்டியையே இந்த e-அக்சஸ் ஸ்கூட்டர் சந்தித்திருக்கும். 1 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் அல்லது அதற்குள்ளான விலையிலேயே e-அக்சஸை விட சிறப்பான வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஹீரோ (விடா) ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications