கார்களில் அதிரடி மாற்றங்களைச் செய்த டொயோட்டா.. வாடிக்கையாளர்களால் இனி வாங்க முடியுமா?
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் பல்வேறு கார் மாடல்களின் விலைகளையும் டொயோட்டா உயர்த்தியிருக்கிறது. ஏற்கனவே இந்தாண்டு கார்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. தற்போது மீண்டும் குறிப்பிட்ட கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டுரையில், அர்பன் க்ரூஸர் டெய்ஸர், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹைலக்ஸ் ஆகிய டொயோட்டா கார் மாடல்கள் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
அர்பன் க்ரூஸர் டெய்ஸர்:
இந்தியாவில் டொயோட்டாவின் இரண்டாவது விலை குறைவான கார் மாடல் இந்த அர்பன் க்ரூஸர் டெய்ஸர் (Urban Cruiser Taisor) தான். மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸின் ரீபேட்ஜ்டு மாடலாக இந்த டெய்ஸர் கிராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்ட்களின் விலைகளை மட்டும் தற்போது டொயோட்டா உயர்த்தியிருக்கிறது. V 1.0 லிட்டர் டர்போ ஆட்டோமேட்டிக் வேரியன்டின் விலைகளானது ரூ.24,000 வரையிலும், G 1.0 லிட்டர் டர்போ ஆட்டோமேட்டிக் வேரியன்டின் விலையானது ரூ.22,000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்களின் விலைகளானது ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து அர்பன் க்ரூஸர் டெய்ஸர் கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடலானது இனி ரூ.7.25 லட்சம் முதல் ரூ.12.63 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால், இந்தக் காரின் தொடக்க விலையிலும் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்பன் க்ரூஸர் ஹைரைடர்:
டொயோட்டாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இந்த அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder). மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவியின் ரீபேட்ஜ்டு வடிவமாக இந்த ஹைரைடர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் காரின் குறிப்பிட்ட வேரியன்ட்களின் விலைகளை மட்டும் ஒரே மாதிரியாக ரூ.5,000 வரை உயர்த்தியிருக்கிறது டொயோட்டா.
E 1.5 பெட்ரோல் மேனுவல், S 1.5 பெட்ரோல், S 1.5 CNG மேனுவல், G 1.5 CNG மேனுவல் மற்றும் V ஹைபிரிட் 1.5 e-CVT ஆகிய வேரியன்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனைத் தவிர மற்ற அனைத்து வேரியன்ட்களின் விலைகளும் ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து இனி ஹைரைடர் எஸ்யூவி மாடலானது ரூ.10.99 லட்சம் முதல் ரூ.20.19 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஹைலக்ஸ்:
இந்தியாவில் தற்போது லைஃப்ஸ்டைல் பிக்-அப் ட்ரக்கை விற்பனை செய்து வரும் ஒரே நிறுவனமாக டொயோட்டா மட்டுமே இருந்து வருகிறது. ஹைலக்ஸ் (Hilux) என்ற லைஃப்ஸ்டைல் பிக்-அப்பை இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலை மூன்று வேரியன்ட்களாக மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், மூன்று வேரியன்ட்களின் விலைகளுமே தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
2.8 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் இன்ஜின் தேர்வை மட்டுமே கொண்டு ஸ்டாண்டர்டு மேனுவல், ஹை மேனுவல் மற்றும் ஹை ஆட்டோமேட்டிக் என மூன்று வேரியன்ட்களாக இந்த ஹைலக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஹை வேரியன்ட்களின் விலைகளை ரூ.62,700 வரையிலும், ஸ்டாண்டர்டு வேரியன்டின் விலையை ரூ.49,600 வரையிலும் உயர்த்தியுள்ளது டொயோட்டா.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து டொயோட்டா ஹைலக்ஸ் லைஃப்ஸ்டைல் பிக்-அப் ட்ரக் மாடலானது இனி ரூ.28.52 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஹைலக்ஸ் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்டின் பிளாக் எடிஷன் மாடல்களையும் இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. ஆனால் அவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே ரூ.35.85 லட்சத்திலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சத்தமில்லாமல் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மாஸ் மார்க்கெட் கார் மாடல்களின் விலைகளை டொயோட்டா உயர்த்தியிருக்கிறது. ஆனால் அனைத்து வேரியன்ட்களுக்கும் இல்லாமல் குறிப்பிட்ட வேரியன்ட்களின் விலைகள் மட்டுமே தற்போது உயர்த்தப்பட்டிருக்கின்றன. இது வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவை பெரியளவில் மாற்றாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications