ஒரு நாளைக்கு அசால்ட்டா 1,000 கார்களை விற்கும் டொயோட்டா! 2026 ஆரம்பமே அதிரடியா இருக்கே!!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம், 2026 ஜனவரியில் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் நிலையான தேவை மற்றும் அதிகரித்த ஏற்றுமதி ஆகிய இரண்டும் இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
எஸ்யூவி (SUV) மற்றும் எம்பிவி (MPV) கார்கள் பிரிவுகளில் பரந்த அளவிலான தயாரிப்புகளுடன், மாருதி சுஸுகி (Maruti Suzuki) உடனான கூட்டணி மூலம் டொயோட்டா கணிசமான வளர்ச்சியை பெற்று வருகிறது. கடந்த ஜனவரியில் டொயோட்டாவின் மொத்த விற்பனை (உள்நாட்டு + ஏற்றுமதி) 33,880 யூனிட்களாக உயர்ந்துள்ளது.

இது, 2025 ஜனவரியின் 29,371 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 15.35% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. டொயோட்டாவின் உள்நாட்டு விற்பனை மட்டும் 17.01% அதிகரித்து 30,630 யூனிட்களை எட்டியுள்ளது. இது 2025 ஜனவரியில் இருந்த 26,178 யூனிட்களை விட அதிகம் ஆகும். அதேநேரம், 2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையில் சற்று சரிவு காணப்பட்டுள்ளது.
2025 டிசம்பரில், இந்தியாவில் தனது சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 34,157 கார்களை டொயோட்டா விற்றிருந்த நிலையில், 2026 ஜனவரியில் உள்நாட்டு விற்பனை 10.33% குறைந்துள்ளது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2026 ஜனவரியில் 3,250 டொயோட்டா கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது 2025 ஜனவரியில் ஏற்றுமதி செய்யப்பட்ட 3,193 யூனிட்களை விட 1.79% அதிகரிப்பு ஆகும். அதாவது 57 யூனிட்கள் அதிகம்.

கடந்த ஜனவரி மாதத்தில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியச் சந்தைக்கான தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) காரான 'அர்பன் க்ரூஸர் எபெல்லா' (Urban Cruiser Ebella)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி இ-விட்டாரா (e-Vitara) காருடன் தனது தளத்தையும் பேட்டரியையும் பகிர்ந்து கொள்ளும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார், டொயோட்டாவின் சந்தை இருப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்பன் சமநிலை, பசுமையான மற்றும் நிலையான போக்குவரத்துக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் எபெல்லா பிரதிபலிக்கிறது. மாருதி சுஸுகியின் குஜராத் ஆலையில் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி, உள்நாட்டுச் சந்தைக்கும், ஏற்றுமதிக்கும் பயனளிக்கும். இதன் மூலம் வரும் மாதங்களில் டொயோட்டா இந்தியச் சந்தையில் தனது விற்பனை வேகத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

விற்பனைச் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை, சேவை மற்றும் யூஸ்டு-கார் வணிகத்தின் நிர்வாக துணைத் தலைவர் திரு.சபரி மனோகர், "எங்களின் தயாரிப்புகளின் தொடர்ச்சியான உத்வேகம் மற்றும் தரம், பாதுகாப்பு, நிலைத்தன்மை மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுடன், 2026ஆம் ஆண்டு நேர்மறையாகத் தொடங்கியுள்ளது" என்றார்.
மேலும் அவர், "வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத்திற்கான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதில் எங்கள் கவனம் மேலும் வலுவடைந்துள்ளது. ஜனவரி மாதத்தின் முக்கிய சிறப்பம்சமாக, முழு-எலெக்ட்ரிக் அர்பன் க்ரூஸர் எபெல்லா அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் கார்பன் சமநிலை, பசுமையான மற்றும் நிலையான போக்குவரத்துக்கான மாற்றத்திற்கு எங்களின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும்" என்று தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் ஆனது இந்தியாவில் கார்கள் விற்பனையை வெகுவாக அதிகரித்துள்ளது. அதன் மூலம் பலனடைந்த கார் நிறுவனங்களுள் டொயோட்டாவும் ஒன்றாகும். இருப்பினும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மற்ற முன்னணி கார் நிறுவனங்கள் அடைந்த அளவிற்கு கார்கள் விற்பனையில் டொயோட்டா பெரிய அளவிலான வளர்ச்சியை அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









