தமிழ்நாட்டுப் பக்கமே வரமாட்டேன்.. டொயோட்டா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது டொயோட்டா. ஆனால், அந்நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில் குறிப்பிட்ட அளவு மாருதியின் ரீபேட்ஜ்டு மாடல்களாகவே இருந்து வருகிறது. அந்தக் கார்களை மாருதியே டொயோட்டாவுக்குத் தயாரித்துக் கொடுக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பட்ஜெட்டை மையமாகக் கொண்டு செயல்படும் இந்திய சந்தையில் ரூ.20 லட்சத்திற்குள்ளான விலைகொண்ட டொயோட்டாவின் குறைந்த விலை கார் மாடல்களே எல்லாமே மாருதியின் ரீபேட்ஜ் தான்.
இந்த நிலையில் இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க தயாரிக்கும் அளவை உயர்த்துவதில் டொயோட்டா ஆர்வமாக இருக்கிறது. இந்தியாவிற்குள் விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தியாவில் கார்களைத் தயாரிப்பதில் டொயோட்டா ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவை தங்களுக்கான முக்கிய தயாரிப்புக் களங்களுள் ஒன்றாக மாற்ற டொயோட்டா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிகாவில் புதிய தொழிற்சாலைகளை நிறுவ டொயோட்டா திட்டமிட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தியாவின் முன்னணி தொழிற்துறை மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் மூன்று புதிய ஆலைகளை அமைக்க டொயோட்டா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று ஆலைகளும் செயல்பாட்டிற்கு வரும் போது, தற்போது தயாரிக்கும் அளவை விட மும்மடங்கு அதிக கார்களை டொயோட்டா தயாரிக்கும் எனக் கூறப்படுகிறது.
2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தங்களுடைய அனைத்து ஆலைகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஆண்டிற்கு 10 லட்சம் கார்களை தயாரிக்கும் திறனைப் பெற்றிருக்க வேண்டும் என டொயோட்டா இலக்கு நிர்ணயித்துள்ளதாம். இதற்காகத் தான் மேலே கூறியது போல 1.9 பில்லியன் அமெரிக்க டார்கள், அப்படியென்றால் இந்திய மதிப்பிற்கு ரூ.18,100 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

தற்போது கர்நாடகாவில் பெங்களூருவுக்கு அருகே பிடாடியில் டொயோட்டாவின் மூன்று தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்தே இந்தியாவிற்கான கார்களை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக இந்த ஆலைகளில் ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல்களை அதிகளவில் டொயோட்டா தயாரித்து வருகிறது. புதிதாக மகாராஷ்டிராவில் அமைக்கப்படவிருக்கும் தொழிற்சாலைகளில், உள்நாட்டில் விற்பனை செய்வதற்கான கார்களின் தயாரிப்பு மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதிக்கான கார்களையும் அதிகளவில் தயாரிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிகளவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் டொயோட்டாவே முதலிடத்தில் உள்ளது. தாய்நாடான ஜப்பானில் ஆண்டுக்கு 33 லட்சம் கார்களை தயாரிக்கும் திறனுடைய ஆலைகளைக் கொண்டுள்ளது டொயோட்டா. அதேபோல் சீனாவிலும், அமெரிக்காவிலும் முறையே 22 லட்சம் மற்றும் 15 லட்சம் கார்களை தயாரிக்கும் திறனுக்கு ஆலைகளைக் கொண்டுள்ளது.
2030ம் ஆண்டில் மகராஷ்டிராவில் தற்போது புதிதாகத் திட்டமிடப்பட்டிருக்கும் ஆலைகள் முழுவதுமாக செயல்பாட்டிற்கு வரும் போது மேலே கூறியது போல் ஒட்டுமொத்தமாக 10 லட்சம் கார்களை இந்தியாவில் தயாரிக்கும் திறனை டொயோட்டா கொண்டிருக்கும். இது சர்வதேச அளவில் டொயோட்டாவின் நான்காவது பெரிய தயாரிப்பு நாடாக இந்தியாவை மாற்றும். தற்போது புதிய ஆலைகள் குறித்து அந்நிறுனம் திட்டமிட்டே வருகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாராகி வருகிறது டொயோட்டா. ஏற்கனவே புதிய எலெக்ட்ரிக் கார் மற்றும் புதிய எஸ்யூவி ஆகியவற்றை இந்திய சந்தைக்காகத் திட்டமிட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ற வகையில் தயாரிப்பையும் அதிகரிக்கவுள்ளது. புதிய ஆலைகள் அமைக்கப்படுவது இந்தியாவில் வேலைவாய்ப்பிற்கு வழிவகுப்பதோடு, புதிய கார் மாடல்களை நேரடியாக இந்தியாவில் தயாரித்து குறைவான விலையில் வெளியிடவும் உதவும். எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் புதிய ஆலை அமைக்கப்படுவது பாஸிட்டிவான விஷயம் தான்.


Click it and Unblock the Notifications