அடுத்த 2 வாரங்களில் அறிமுகமாகும் முக்கியமான 5 புதிய கார்கள்... இந்த லிஸ்ட்ட பார்த்துட்டு புக் பண்ணுங்க!!
பண்டிகை காலம் துவங்க இருக்கும் நிலையில், இந்திய கார் சந்தையில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தின் இறுதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பல்வேறு வகைகளில் பல புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இந்த புதிய மாடல்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
பிஎம்டபிள்யூ, ஆடி, மாருதி, கியா மற்றும் எம்ஜி என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார்களும் அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில், பெரும்பாலான மாடல்களுக்கு புக்கிங்கும் டீலர்களில் ஏற்கப்படுகிறது. மாடல்வாரியான தேதி மற்றும கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

1. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எல்டபிள்யூபி
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப ரக எஸ்யூவி மாடலாக விற்பனையில் இருக்கும் எக்ஸ்1 எஸ்யூவியின் அடிப்படையிலான அதிக வீல்பேஸ் நீளம் கொண்ட எக்ஸ்1 LWB மாடல் ஆகஸ்ட் 21ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, சாதாரண எக்ஸ்1 எஸ்யூவியைவிட இந்த மாடல் 110மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சன் தேர்வுகளில் கிடைக்கும். இந்த காருக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டது. வழக்கமான எக்ஸ்1 எஸ்யூவியைவிட இந்த புதிய மாடலில் அதிக இடவசதி இருக்கும்.

2. புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகிய ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டி மாடலாக ஆடி க்யூ3 எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், க்யூ3 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலானது வரும் 25ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய க்யூ3 எஸ்யூவியில் மாற்றங்களுடன் கூடிய வெளிப்புற வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

3. எம்ஜி ஹெக்டர் ஹாக் எலெக்ட்ரிக் எஸ்யூவி
எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் வின்ட்ஸ்டர் கார் மூலமாக ருசி கண்ட பூனையாகி இருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் மாடல்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், புதிய 7-சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வரும் 26ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. மிக தாராளமான உட்புற இடவசதி, சக்திவாய்ந்த பேட்டரி, 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடலானது அண்மையில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ADAPT கட்டமைப்பு அடிப்படையில் உருவாக்கப்படும் முதல் மாடலாக இருக்கும். எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள்,12.8 அங்குல தொடுதிரையுடன் பிரம்மாண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெவல் 2 அடாஸ் ஆகியவை இடம்பெறுகிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கி.மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று வரிசை இருக்கைகள் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் வரும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், குடும்ப வாடிக்கையாளர்களை முக்கியமாக குறிவைக்கும்.

4. கியா சொரென்டோ
வரும் செப்டம்பர் 4ந் தேதி கியா மோட்டார் நிறுவனம் தனது சொரென்டோ எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எஸ்யூவியும் 7 சீட்டர் மாடலாக வர இருக்கிரது. எல்இடி லைட்டுகள், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெறுகிறது. 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலாக இருக்கும். இதனுடன் 202 பிஎஸ் பவரை வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரிலும் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு அம்சம் இருக்கும்.

5. மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்
பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் மாருதி பலேனோ காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் செப்டம்பர் 5ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வர இருக்கிறது. புதிய க்ரில், பம்பர், அலாய் வீல்கள் இடம்பெறும். உட்புறத்திலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
5 முக்கிய கார்கள்!
வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 5 வரையிலான இந்த காலகட்டத்தில் மொத்தம் ஐந்து புதிய கார்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகின்றன. பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடுவோருக்கு இந்த மாடல்கள் நிச்சயம் கூடுதல் மதிப்பை தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


Click it and Unblock the Notifications
