எலெக்ட்ரிக் கார் விரும்பாதவர்களையும் ஈர்க்கும் 3 டாடா எலெக்ட்ரிக் கார்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்த நிலையை தொடர, அடுத்தடுத்து புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது.
தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அடுத்த 12- 18 மாதங்களில் சந்தையில் மூன்று புதிய எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அவை மூன்றுமே வெவ்வேறு விதமான வாடிக்கையாளர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஒன்று, தற்சமயம் விற்பனையில் இருக்கும் டியாகோ இவி (Tiago EV) எலெக்ட்ரிக் காரின் அப்கிரேட் வெர்சன் (Upgrade Version) ஆகும்.

புதிய டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே சிலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளம் காணப்பட்டு இருந்தது. அப்போது கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருந்தாலும், புதிய டியாகோவின் வெளிப்புறம் என்னென்ன மாற்றங்களை பெற்றுவர உள்ளது என்பதை கணிக்க முடிந்தது. புதிய டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில் புதிய டிசைனிலான எல்இடி ஹெட்லைட்களை டாடா நிறுவனம் வழங்குகிறது.
அத்துடன், காரின் முன் & பின்பக்க பம்பர்களின் வடிவமும் மாற்றப்படுகிறது. இவற்றிற்கு ஏற்ப காரின் சக்கரங்களின் டிசைனும் எதிர்காற்றில் எளிதாக சுழல்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்படலாம். மேலும், சோதனை ஓட்ட டியாகோ இவி காரில் வெளிப்பக்க மிரர்கள் பெரிய அளவில் வழங்கப்பட்டு இருந்தன. அதன்படி பார்க்கும்போது, 360-டிகிரி கேமரா இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம்.

இதேபோல், புதிய டியாகோ இவி காரில் உட்புற கேபினிலும் பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன், ஃபுல்-டிஜிட்டல் டயல்கள், சிறந்த தரத்தில் மெட்டீரியல்கள் மற்றும் மேம்பட்ட கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவையும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, அப்டேட் செய்யப்படும் டியாகோ இவி காரில் 30kWh பேட்டரி பேக் வழங்கப்பட உள்ளது.
இந்த பேட்டரி பேக் ஆனது தற்சமயம் பன்ச் இவி (Punch EV) எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுகிறது. டியாகோ இவி-ஐ போன்று சியரா இவி (Sierra EV) எலெக்ட்ரிக் காரின் வடிவமைப்பிலும் டாடா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. தற்சமயம் விற்பனையில் உள்ள கர்வ் இவி (Curvv EV) காரை காட்டிலும் அளவில் பெரியதாக சியரா இவி உருவாக்கப்படுகிறது.
சியரா இவி எலெக்ட்ரிக் காரில் 55kWh மற்றும் 65kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இவை அதிகப்பட்சமாக 500கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக இருக்கும். புதிய சியரா இவி ஆனது ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் இரு விதமான திசைகளில் செயல்படக்கூடிய சார்ஜிங் என இரண்டையும் ஏற்கக்கூடியதாக இருக்கலாம்.
டியாகோ இவி மற்றும் சியரா இவி இவை இரண்டுடன் அவின்யா (Avinya) என்கிற துணை பிராண்டில் ஒரு எலெக்ட்ரிக் காரை களமிறக்கவும் டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் எமா (EMA) கட்டமைப்பில் உருவாக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் கார் ஆனது 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸை ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் முந்தும் நிலையில் உள்ளது. ஆகையால், டாடா மோட்டார்ஸ் தனது நிலையை தக்க வைத்து கொள்ள இவ்வாறான புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களையும் மூன்று விதமான வாடிக்கையாளர்களை டார்க்கெட் செய்து டாடா கொண்டுவருவது கூடுதல் சிறப்பாகும்.


Click it and Unblock the Notifications