தூத்துக்குடி ஆலையில் கார் உற்பத்தி தொடரும்... வின்ஃபாஸ்ட் விளக்கத்தால் பணியாளர்கள் நிம்மதி!
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கார் உற்பத்தித் திட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்நிறுவனம் முக்கிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஆலையில் VF 6 மற்றும் VF 7 எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் அசெம்பிள் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார் வர்த்தகத்தை வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் தனது வாகன ஆலையை அமைத்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு இந்த ஆலை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இங்கு கார் உற்பத்திப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதுடன், எலெக்ட்ரிக் பஸ் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் அடுத்தடுத்து இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் திட்டத்திலும் உள்ளது.

இந்த நிலையில், VF3, VF6 மற்றும் VF7 உள்ளிட்ட சில மாடல்களுக்கு இந்தியாவில் உள்ளூரிலேயே உதிரிபாகங்களை தயாரித்து அதிக அளவில் உற்பத்தி செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டது. இதனால் தூத்துக்குடி ஆலையின் எதிர்காலம் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் குறித்தும் கேள்விகள் எழுந்தன.
ஆனால், தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் VF 6 மற்றும் VF 7 மாடல்களின் உற்பத்தி மற்றும் அசெம்பிள் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என வின்ஃபாஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு கார்களும் தொடர்ந்து CKD முறையில் தூத்துக்குடி ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.
காரின் முக்கிய பாகங்கள் வெளிநாட்டிலிருந்து தனித்தனியாக கொண்டுவரப்பட்டு, தூத்துக்குடி ஆலையில் அவை ஒன்றிணைக்கப்பட்டு முழுமையான காராக உருவாக்கப்படும். எனவே, தற்போது விற்பனையில் உள்ள VF 6 மற்றும் VF 7 கார்களின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் உடனடியாக எந்த பாதிப்பும் இருக்காது.
மேலும், தனது நீண்டகால வர்த்தகம் மற்றும் உற்பத்தி திட்டத்தில் இந்திய சந்தை மிக முக்கியமானது என்றும் வின்ஃபாஸ்ட் கூறியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக எலெக்ட்ரிக் கார்களை வடிவமைத்து, அதிக அளவில் இந்திய உதிரிபாகங்களை பயன்படுத்தும் நோக்கத்திலும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதற்காக இந்தியா மற்றும் வியட்நாமிலும் 300க்கும் மேற்பட்ட இந்திய சப்ளையர்களுடன் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆலோசனைகளையும் நடத்தியுள்ளது. மேலும், தூத்துக்குடி ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கும் முதலீட்டு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் தூத்துக்குடி ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் ஆட்டோமொபைல் சப்ளையர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த குழப்பம் தற்போது ஓரளவு நீங்கியுள்ளது. ஆலை செயல்பாடுகள் தொடரும் என்ற வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விளக்கம், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு மாதங்களாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மெல்ல வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்த சூழலில், நேற்று வெளியான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தகவலால் சப்ளையர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி உள்ளது.
This article has been updated with more details.


Click it and Unblock the Notifications

