இந்திய EV மார்க்கெட்டில் வின்ஃபாஸ்ட் அசத்தல்... BYD, KIA நிறுவனங்களை முந்திய கார் விற்பனை!
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிதாக களமிறங்கிய வின்ஃபாஸ்ட், மிக குறுகிய காலத்திலேயே கவனித்தக்க அளவில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூலை மாத விற்பனையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 1,478 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன சந்தையில் மிக முக்கிய பங்களிப்புடன் முன்னேறி வருகிறது.
முன்ணணி பிராண்டுகளுடன் போட்டி
வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த விற்பனை எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் உலகப் பிரபலமான சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் 742 கார்களையும், இந்திய சந்தையில் நம்பகமான பிராண்டாக மாறி இருக்கும் தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் 464 மின்சார கார்களையும் விற்பனை செய்துள்ளன.

ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களையும் விட வின்ஃபாஸ்ட் அதிக எண்ணிக்கையிலான கார்களை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, பிஒய்டி நிறுவனத்தைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு கார்களையும், கியா மோட்டாரைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான கார்களையும் வின்ஃபாஸ்ட் விற்பனை செய்துள்ளது.
5வது இடம்
எனினும், ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் பயணிகள் வாகன நிறுவனங்களின் தரவரிசையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தற்போது 5வது இடத்தில் உள்ளது. அதற்கு முன்னதாக டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார், மாருதி சுஸுகி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. எனவே, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை விற்பனையில் பெற்று வருகிறது வின்ஃபாஸ்ட்.
மேலும், கடந்த ஜூலை மாத விற்பனை வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விற்பனையில் இதுவரையிலான சிறந்த மாதமாகவும் அமைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 1,448 வாகனங்களை பதிவு செய்திருந்த நிலையில், ஜூலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் உற்பத்தி
கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் மாதத்தில்தான் தூத்துக்குடி ஆலையை அதிகாரப்பூர்வமாக வின்ஃபாஸ்ட் திறந்தது. ஆரம்ப கட்டத்தில் ஆண்டுக்கு 50,000 எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை, எதிர்காலத்தில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் வகையில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
தவிரவும், தமிழ்நாட்டில் தனது அடுத்தகட்ட விரிவாக்கத்தையும் அறிவித்துள்ளது. கூடுதலாக சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 500 மில்லியன் டாலர் முதலீட்டில் எலெக்ட்ரிக் பஸ் மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்திப் பிரிவுகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
கார் மட்டுமில்லை
மற்ற நிறுவனங்கள் போல அல்லாமல் இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் அனைத்து ரக வாகனங்களையும் கொண்டு வரும் திட்டத்துடன் வின்ஃபாஸ்ட் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்களை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கார் சந்தையில் மட்டும் போட்டியிடாமல், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார இருசக்கர மற்றும் வர்த்தக வாகன சந்தையிலும் கால் பதிக்க உள்ளது.
மேலும், சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் விற்பனை, சர்வீஸ் நெட்வொர்க்கையும் விரிவுபடுத்தும் பணிகளில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு ஆலை அதன் இந்திய உற்பத்தி மட்டுமின்றி எதிர்கால ஏற்றுமதி மையமாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
அடுத்து என்ன?
தற்போது இந்தியாவில் VF6, VF7 உள்ளிட்ட மின்சார கார் மாடல்களுடன் போட்டி போட்டு வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனம், எதிர்காலத்தில் குறைந்த விலை பிரிவிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, எம்ஜி நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

