15,000 எலெக்ட்ரிக் கார்களுடன் டாக்ஸி சேவையில் களமிறங்கும் வெளிநாட்டு நிறுவனம்
வழக்கமாக கார் தயாரிப்பு நிறுவனங்கள், கார்களை தயாரிப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும். அதனைத் தவிர்த்து பிற சேவைகள் அனைத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ளப்படும். வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் கார் தயாரிப்பு மட்டுமின்றி இந்தியாவில் டாக்ஸி சேவை வழங்கும் வணிகத்திலும் ஈடுபடவிருக்கிறது.
இது அந்நிறுவனத்திற்கு புதிது கிடையாது, தங்களது தாய்நாடான வியட்நாம் உட்பட, இந்தோனேஷியா, லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார் விற்பனையுடன், தங்களது எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டே டாக்ஸி சேவையையும் அந்நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவில் அதனை எப்படி அந்நிறுவனம் செயல்படுத்தவிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

வின்ஃபாஸ்ட் தற்போது இந்தியாவில் மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. VF6, VF7 மற்றம் எம்பிவி 7. இதில் மூன்றாவதாகக் கூறப்பட்ட எம்பிவி 7 காரையே டாக்ஸி சேவைக்காக அந்நிறுவனம் பயன்படுத்தவிருக்கிறது. ஆனால் டாக்ஸிக்காகப் பயன்படுத்தப்படும் கார்கள் வின்ஃபாஸ்ட் என்ற பெயரில் இல்லாமல், 'கிரீன் அண்டு ஸ்மார்ட் மொபிலிட்டி' (GSM) என்ற நிறுவன பெயரைக் கொண்டிருக்கும். இதுவும் வின்ஃபாஸ்டின் ஒரு அங்கம் தான்.
எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை டாக்ஸி பயன்பாட்டிற்காக கிரீன் SM என்ற பெயரில் இந்தியாவில் வெளியிடப்படவிருக்கிறது. பார்த்தவுடன் விரைவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மக்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகவும் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை, டர்கைஸ் நிறத்தில் மட்டுமே டாக்ஸிக்காக இந்தியாவில் பயன்படுத்தவுள்ளது வின்ஃபாஸ்ட். இதனைப் பார்த்தவுடனேயே வின்ஃபாஸ்டின் எலெக்ட்ரிக் டாக்ஸி என்பதனை மக்கள் புரிந்து கொள்ளலாம்.

முதற்கட்டமாக டெல்லி NCR பகுதியில் 1000 எலெக்ட்ரிக் கார்களுடன் வின்ஃபாஸ்டின் இந்த டாக்ஸி சேவை தொடங்கப்படவிருக்கிறது. டெல்லியைத் தொடர்ந்து பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவிருப்பதாகத் தெரிகிறது. தற்போது 1000 கார்களுடன் மட்டுமே தொடங்கினாலும், விரைவிலேயே 15,000 கார்களுடன் தங்களுடைய டாக்ஸி சேவையை இந்தியா முழுவதும் இருக்கும் பெருநகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய வின்ஃபாஸ்ட் திட்டமிட்டிருக்கிறது.
தங்களது தாய்நாடான வியட்நாமில் 62 நகரங்களில் இந்த டாக்ஸி சேவையை வின்ஃபாஸ்ட் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே வின்ஃபாஸ்டின் தயாரிப்புத் தொழிற்சாலை உள்ளது. ஆண்டுக்கு 1.5 லட்சம் கார்கள் வரை தயாரிக்கும் திறனை இந்த தொழிற்சாலை கொண்டிருக்கிறது. டாக்ஸி சேவையைத் தொடங்குவதன் மூலம் தங்களுடைய கார்களை தாங்களே சிறப்பாக பயன்படுத்தும் வாய்ப்பும் வின்ஃபாஸ்டுக்கு உள்ளது.
இந்த டாக்ஸி சேவைக்கு கீமீ-க்கு 8 ரூபாய் வரை வசூலிக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. கிரீன் SM நிறுவனத்துடன், அதாவது வின்ஃபாஸ்டுடன் ஓட்டுநராக இணைந்து மாதம் 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா, உபர் போன்ற நிறுவனங்களுக்கும், வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனத்தின் டாக்ஸி சேவைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கின்றன.
ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் நேரடியாக களத்தில் டாக்ஸி சேவை வழங்குவதில்லை. மாறாக டாக்ஸி ஓட்டுநர்களை மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் பாலமாக மட்டுமே அது செயல்படுகிறது. ஆனால் வின்ஃபாஸ்ட் அப்படி அல்ல. நேரடியாக அந்நிறுவனமே களத்தில் டாக்ஸி சேவை வழங்குகிறது. எனவே இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய விதமான அனுபவமாக இருக்கும் எனத் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேப்பரில் வின்ஃபாஸ்டின் டாக்ஸி சேவை மிகவும் சிறப்பான ஒரு திட்டமாகவே இருக்கிறது. இது சரியாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகவே இருக்கும். ஓலா, உபர் மூலம் நாம் பயன்படுத்தும் டாக்ஸி சேவையில் இருக்கும் பிரச்சினைகள் நமக்குத் தெரியாமல் இல்லை. புதிய டாக்ஸி சேவை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications