'மேட் இன் இந்தியா' VF3, VF6, VF7 கார்கள் திட்டம் நிறுத்தி வைப்பு... வின்ஃபாஸ்ட் எடுத்த அதிரடி முடிவு
இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை வேகப்படுத்தி வரும் வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 'மேட் இன் இந்தியா' திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்நிறுவனத்தின் VF3, VF6 மற்றும் VF7 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு இந்திய உதிரிபாகங்களை அதிகபட்சம் பயன்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சப்ளையர்களுக்கு அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, கடந்த ஜூலை மாதம் வின்ஃபாஸ்ட் தனது இந்திய சப்ளையர்களுக்கு அனுப்பிய தகவலில், VF3, VF6 மற்றும் VF7 ஆகிய மூன்று மாடல்களுக்கு இந்தியாவில் உதிரி பாகங்களை உருவாக்குவதற்கான செலவு எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு சப்ளையர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அசெம்பிள் செய்து விற்பனை
கடந்த ஆண்டுதான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்கியது. தற்போது VF6 மற்றும் VF7 ஆகிய மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கார்கள் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. ஆனால், VF6 மற்றும் VF7 கார்களுக்கான முக்கிய பாகங்கள் வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, தூத்துக்குடி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.
அதேநேரத்தில், இந்தியாவில் உதிரிபாகங்களை பெற்று அசெம்பிள் செய்தால் உற்பத்தி செலவீனம் குறையும் என்பதுடன், தேவைக்கு ஏற்ப விரைவாக உள்ளூர் சப்ளையர்களிடம் இருந்து பெறும் வாய்ப்பும் கிட்டும். இதனால், சந்தையில் போட்டியை சமாளித்து மிக சரியான விலையில் வாடிக்கையாளர்களுக்கு கார்களை விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்த்தது. ஆனால், உள்நாட்டு உதிரிபாகங்களை உற்பத்தி செலவு, எதிர்பார்த்த அளவு கட்டுக்குள் வரவில்லை என்று தெரிகிறது.
VF3 காருக்கும் சிக்கல்
குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக எதிர்பார்க்கப்படும் VF3 எலெக்ட்ரிக் காருக்கும் இந்த முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், VF3, VF6 மற்றும் VF7 ஆகிய மாடல்களுக்காக உதிரிபாகங்களை உருவாக்குவதற்காக இந்திய சப்ளையர்கள் செய்துள்ள முதலீட்டு விபரங்களை வின்ஃபாஸ்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் அவர்கள் செய்த முதலீட்டுத் தொகையை திரும்பி வழங்குவதற்காக முழு விபரங்களையும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
விற்பனை தொடரும்
அதேநேரத்தில், VF6 மற்றும் VF7 கார்களின் தற்போதைய இந்திய விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்க்போல் வியட்நாமிலிருந்து முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு தூத்துக்குடி ஆலையில் இந்த கார்கள் அசெம்பிள் செய்து விற்பனைக்கு அனுப்பப்படும்.
இந்தியாவில் ஆண்டுக்கு 50,000 மின்சார கார்களை தயார் செய்யும் உற்பத்தித் திறனுடன் வின்ஃபாஸ்ட் தனது ஆலையை தூத்துக்குடியில் அமைத்துள்ளது. எதிர்காலத்தில் உற்பத்தி திறனை 1.5 லட்சம் வாகனங்கள் வரை அதிகரிக்கும் திட்டமும் உள்ளது.
மறுபரிசீலனை
ஆனால், இந்தியாவில் போட்டி நிறைந்த எலெக்ட்ரிக் கார் சந்தையில் விலையை கட்டுப்படுத்த உள்நாட்டுப் பாகங்களை பயன்படுத்துவது முக்கியமானதாக இருக்கும். ஆனால், எதிர்பார்த்த அளவு உதிரிபாகங்கள் விலை வரவில்லை என்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் மாற்றங்களுடன் கொண்டு வரப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
Source: Reuters


Click it and Unblock the Notifications

