7 பேர் போகக்கூடிய புதிய காரை உருவாக்கும் ஃபோக்ஸ்வாகன்... விலையை கம்மி பண்ண இப்படியொரு பிளான்-ஆ?
ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) தனது புதிய மூன்று வரிசை எஸ்யூவி காராக டைரோன் (Tayron)-ஐ விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வாகன் டிகுவான் (Tiguan) காருக்கு மேல் நிலைநிறுத்தப்படும் இது, ஃபோக்ஸ்வாகன் பிராண்டின் முதன்மையான ஃபேமிலி எஸ்யூவியாக இருக்கும். இந்த நிலையில், இதன் சமீபத்திய டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டீசர் காட்சிகளில் டைரோன் எஸ்யூவி காரின் முகப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு வெளியாகியுள்ளது. முகப்பில் முழு அகலத்திற்கான எல்.இ.டி லைட் பார் மற்றும் எரியும் ஃபோக்ஸ்வாகன் லோகோ உள்ளன. பின்புறத்தில், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்.இ.டி டெயில் லேம்ப்கள் மற்றும் பளபளக்கும் 'VW' பேட்ஜ் காணப்படுகின்றன.

இந்த வடிவமைப்பு ஃபோக்ஸ்வாகனின் உலகளாவிய ஸ்டைல் உடன் பிரீமியமாகத் தெரிகிறது. டைரோன் எஸ்யூவி, டிகுவான் மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) கார் மாடல்களை போன்று எம்.க்யூ.பி எவோ (MQB EVO) பிளாட்ஃபார்மில் கட்டப்பட்டுள்ளது. நவீன கேபின், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை, மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் போன்ற அம்சங்களை இது கொண்டிருக்கும்.
இந்தியாவிற்கான டைரோன் ஆர்-லைன் காரில், தற்போதைய டிகுவான் ஆர்-லைனில் உள்ள அதே 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் (TSI) என்ஜின் பயன்படுத்தப்படும். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 204 குதிரைத்திறன் மற்றும் 320 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் (DSG) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைத்து வழங்கப்படும்.
4மோஷன் ஆல்-வீல்-டிரைவ் (4MOTION All-wheel-drive) சிஸ்டமும் இந்த காரில் இடம்பெறலாம். டைரோன் கார்களை சிகேடி (CKD) முறையில் பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து, மஹாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகர் ஆலையில் அசெம்பிள் செய்ய ஃபோக்ஸ்வாகன் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி கார் இந்த 2026 முதல் காலாண்டில் அறிமுகமாகும்.
ஆரம்பத்தில் ஸ்போர்ட்டியான ஆர்-லைன் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம் ஃபோக்ஸ்வாகன் பிராண்ட், விலையுயர்ந்த உயர்நிலை எஸ்யூவி கார்கள் பிரிவில் தனது இருப்பை பலப்படுத்த நோக்குகிறது. ஃபோக்ஸ்வாகன் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் திரு.நிதின் கோஹ்லி கூறுகையில், "நாங்கள் பிரீமியம் தயாரிப்புப் பட்டியலை உருவாக்கும்போது, இந்திய கார் வாங்குபவர்களின் வளர்ந்து வரும் விருப்பங்களுக்கு தொடர்ந்து சேவை செய்கிறோம்.
முற்றிலும் புதிய டைரோன் ஆர்-லைன், இந்திய வாடிக்கையாளர்களுக்கான எங்களது தொலை நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான பதாகை தாங்கி ஆகும். போட்டித் தன்மையை உறுதிசெய்ய, எங்கள் சத்ரபதி சம்பாஜி நகர் ஆலையில் இந்த எஸ்யூவி காரை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்வோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரின்படி, சர்வதேச மாடலை ஒத்த வடிவமைப்புடன் டைரோன் வரும். எனினும், பிற வடிவமைப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. உலகளாவிய மாடலில் ஐந்து மற்றும் ஏழு இருக்கை ஆப்ஷன்கள் உள்ளன. இந்திய டைரோன் மாடலின் இருக்கை ஆப்ஷன்கள் மற்றும் உட்புற விவரங்கள் அடுத்தடுத்த டீசர்களில் தெரியவரும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல், இந்த காரின் இந்திய அறிமுகம் வருகிற மார்ச் மாதத்திற்கு உள்ளாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








