மிடில்-கிளாஸ் மக்கள் கார் வாங்குவதா வேணாமா? ஜிஎஸ்டி குறைச்சது எங்க வந்து நிற்குது பாருங்க!
இந்தியச் சாலைகளில் ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் தென்பட்ட சிறிய கார்கள் தற்போது மெல்ல மெல்ல மறைகின்றன. முன்னணி கார் நிறுவனங்கள் ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் பட்ஜெட் விலையிலான கார்களைக் கைவிட கடந்த பல வருடங்களுக்கு முன்பு இருந்தே துவங்கிவிட்டன. கடுமையான புதிய பாதுகாப்பு விதிமுறைகள், அளவில் பெரியதான மற்றும் கம்பீரமான எஸ்யூவி (SUV) ரக கார்கள் மீதான ஆர்வம் இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆகும்.
இதனால், மலிவு விலையிலான கார்களை மட்டுமே வாங்க முடிபவர்களுக்கு, குறைந்துவரும் அத்தகைய கார்களுக்கான ஆப்ஷன்கள் கவலை அளிக்கின்றன. இதற்கேற்ப, ஒவ்வொரு புதிய காரிலும் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயம் என மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், கார் உற்பத்தியாளர்கள் ஆறு ஏர்பேக்குகள் உடன் காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் அதேவேளையில், அதற்கான செலவுகளையும் சமரசம் செய்ய பெரிய அளவிலான கார்களை உருவாக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

கூடுதல் ஏர்பேக்குகளுக்காக காரின் வடிவமைப்பில் மாற்றங்கள், சோதனைகள், புதிய பாகங்கள் தேவைப்படுகின்றன. குறைந்த லாபத்தில் உருவாக்கப்படும் ஹேட்ச்பேக் கார்களுக்கு இந்தச் செலவுகள் லாபத்தை இல்லாததாக்கிவிடும். ஏனெனில், இந்த கூடுதல் பாதுகாப்பு பாகங்கள் கார் உற்பத்திச் செலவை அதிகரிக்கும். இந்த சுமை, அதிக விலையாக வாடிக்கையாளர்கள் மீதுதான் விழுகிறது.
இதில் இருந்து தப்பிக்க, முதல்முறையாக கார் வாங்குவோரும் பழைய கார்களையே சமீப காலமாக அதிகம் தேர்வு செய்கின்றனர் அல்லது இருசக்கர வாகனங்களிலேயே தொடர்கின்றனர். மறுப்பக்கம், இந்த சூழலுக்கு ஏற்ப இந்திய கார்கள் மார்க்கெட்டும் மெல்ல மெல்ல மாறி வருகிறது. இந்தியாவில் கார் வாங்குவோர் தற்போது எஸ்யூவிகளை விரும்புகின்றனர்.

எஸ்யூவி கார்களின் உயரமான இருக்கைகள், கம்பீர தோற்றம், அதிக உட்புற இடவசதி ஆகியவை அவர்களை ஈர்க்கின்றன. இதன் மூலமாக, க்ராஸ்ஓவர் (Crossover) கார்கள், காம்பாக்ட் எஸ்யூவிகளில் கார் உற்பத்தியாளர்கள் லாபம் ஈட்டுகின்றனர். இதனால், அவர்களின் தயாரிப்பு திட்டங்கள் எஸ்யூவிகளை நோக்கி செல்கின்றன. இதன் எதிரொலியாக, சிறிய ஹேட்ச்பேக்குகளுக்கு கவனம், ஆதரவு குறைகிறது. இதுவே 'எஸ்யூவி மீதான மோகம்' எனப்படுகிறது.
பாதுகாப்பு விதிகள் மட்டுமல்லாமல், கடுமையான மாசு உமிழ்வுத் தரநிலைகளால் தூய்மையான என்ஜின்களை காரில் பொருத்த கூடுதல் பாகங்கள் தேவைப்படுவதால் காரின் விலை உயர்கிறது. எஃகு (Steel), எலக்ட்ரானிக்ஸ் (Electronics) விலைகளும், போக்குவரத்து செலவுகளும் சமீப காலத்தில் வெகுவாக உயர்ந்துள்ளன. முன்பு, சிறிய அளவிலான கார்களுக்கு ஓரளவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பெரிய கார்களுக்கான வரிகள் அதிகமாக இருந்தன.

ஆனால், கடந்த 2025 செப்டம்பரில் பெரிய அளவிலான கார்களுக்கான ஜிஎஸ்டி (GST)-இல் தளர்வுகள் கொண்டுவரப்பட்டதால், இனி வரும் காலங்களில் குறைந்த விலையிலான கார்கள் லாபம் ஈட்ட இன்னும் அதிகம் போராட போகின்றன. பல இந்தியக் குடும்பங்களுக்கு, முதல் கார் ஒரு கனவு. அது அந்த குடும்பத்தின் முன்னேற்றம், வசதி மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும்.
சிறிய கார்கள் மறைவதால், அந்தக் கனவு எட்டாததாகிறது. வருமானம் குறைவாக, கடன் வசதி சவாலாக உள்ள சிறு நகர, கிராமப்புற மக்கள் இதை அதிகம் உணர்கின்றனர். குறைந்த விலையிலான எண்ட்ரி-லெவல் கார்கள் பிரிவுகளில் வாடிக்கையாளர்களின் வருகை குறைவு என டீலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, சிறிய கார்கள் உற்பத்தியுடன் தொடர்புடைய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் கவலை எழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, சிறிய கார்கள் சந்தையை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணிகள் பல உள்ளன. அதேநேரம், சிறிய கார்களைப் பாதுகாக்க சில வழிமுறைகளை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏர்பேக்குகள் கொண்ட காம்பாக்ட் கார் மாடல்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைப்பது மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது உள்ளிட்டவை அவற்றுள் சில ஆகும். விருப்பங்களோ கொள்கைகளோ மாறாத வரை, கார் நிறுவனங்கள் எஸ்யூவிகளில் கவனம் செலுத்தலாம். பல கார் ஆர்வலர்களுக்கு இது கலவையான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. சாலைகளில் பாதுகாப்பான வாகனங்கள் அதிகரிக்கும் வேளையில், சிறிய காரின் கதை மெதுவாக மறைகிறது.


Click it and Unblock the Notifications









