டீசல் கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ரோட்டில் ஓடுவதில் இப்ப பாதி கூட இல்ல! ஒரு காலத்தில் எவ்வளவு ரசிகர்கள்...
உலகளவில் டீசல் (Diesel) கார்களின் புகழ் குறைந்து வருகிறது. கடுமையான மாசு உமிழ்வு ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் தூய்மையான மாற்று எரிபொருள் வாகனங்களின் வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். சிறந்த எரிபொருள் திறன் மற்றும் குறைந்த கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்விற்காக முன்பு பாராட்டப்பட்ட டீசல் கார்கள், தற்போது நகர்ப்புற காற்று மற்றும் மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தீங்கு விளைவுக்காகக் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
ஏனெனில், டீசல் என்ஜின்கள் பெட்ரோலை விட கணிசமான அளவில் நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) மற்றும் துகள் பொருட்களை (கரிப்புகை உள்ளிட்டவை) வெளியிடுகின்றன. இந்த மாசுக்கள் நெரிசலான நகர்ப்புறங்களில் புகை மண்டலத்தை உருவாக்கி சுவாச, இருதய நோய்கள் மட்டுமின்றி, புற்றுநோயை உண்டாக்கும் அளவிற்கு நச்சுத்தன்மை கொண்டவைகளாக உள்ளன.

இதனாலேயே, இந்தியா உள்பட உலக நாடுகள் டீசல் கார்களில் தங்களது கட்டுப்பாடுகளை கடுமையாக்கின. அதாவது, டீசல் கார்களில் இருந்து வெளிவரும் மாசுக்களின் அளவை கண்காணித்து, அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என கார் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளை விதித்தன. இந்திய அரசு 2020ஆம் ஆண்டில் கொண்டுவந்த பிஎஸ்6 (BS6) மாசு உமிழ்வு விதிமுறைகளில் டீசல் கார்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.
இதன் காரணமாகவே, மாதந்தோறும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிக பெரிய முடிவாக டீசல் கார்களை விற்பனை செய்வதை நிறுத்தியது. 6 வருடங்களாகி விட்ட போதிலும் இப்போதும் அனைத்து மாருதி சுஸுகி கார்களும் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த பல வருடங்களுக்கு முன்பே சிஎன்ஜி (CNG) கார்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தது கூட இதன் ஒரு காரணமே ஆகும். இந்திய அரசை போன்று மற்ற உலக நாட்டு அரசாங்கங்களும் டீசல் கார்கள் மீதான தங்களது பிடியை இறுக்கமாக்கின. இருப்பினும், ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) நிறுவனம் உமிழ்வுச் சோதனைகளில் மோசடி செய்ய மென்பொருளைப் பயன்படுத்தியது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2015-ஆம் ஆண்டு அம்பலமான இந்த 'டீசல்கேட்' ஊழல், உலகளவில் டீசல் கார்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பெரிதும் தகர்த்தது. இந்தச் சம்பவம் டீசலை 'மாசுபட்ட' எரிபொருளாக சித்தரித்தது. இதுவும் உலகளவில் டீசல் கார்களுக்கான மார்க்கெட்டை குறைத்ததுடன், டீசல் கார்களை உருவாக்குவது கார் நிறுவனங்களுக்கு அதிக செலவுமிக்கதாக மாறியது.

யூரோ 6/7 (ஐரோப்பா) மற்றும் பிஎஸ்6 (இந்தியா) போன்ற புதிய உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்ய, டீசல் என்ஜின்களில் டீசல் துகள் வடிகட்டிகள் (DPF) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினையூக்கி குறைப்பு (SCR) போன்ற சிக்கலான, விலை உயர்ந்த சுத்திகரிப்பு அமைப்புகள் தேவைப்பட்டன. இவற்றை வழங்க கார் நிறுவனங்கள் தயாராக தான் இருந்தன; ஆனால், இவற்றை வழங்கினால் காரின் உற்பத்தி செலவு அதிகரித்து, அவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி, டீசல் கார்களுக்கான பராமரிப்புச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த காரணங்களினால், லண்டன், பாரிஸ், டெல்லி போன்ற உலகின் பல முக்கிய நகரங்கள் டீசல் கார்களுக்கு 10 ஆண்டு கால வரம்புகளை விதித்துள்ளன. அதாவது, 10 ஆண்டுகளுக்கு மேல் பழைய டீசல் கார்களை இந்த நகரங்களில் பயன்படுத்த முடியாது.
இந்திய அரசு சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய 'பழைய வாகன அழிப்பு' கொள்கையும் கூட டீசல் கார்கள் உள்ளிட்ட டீசல் வாகனங்களின் பயன்பாட்டை சாலையில் குறைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டதே ஆகும். ஆனால், இந்த பழைய வாகன அழிப்பு திட்டம் இன்னும் முழுமையாக அமலுக்கு கொண்டுவரப்படவில்லை. அமலுக்கு வந்தால், நாடு முழுவதும் 15 வருடங்களுக்கு மேல் பழைய டீசல் கார்களை பயன்படுத்த முடியாது.
பல நாடுகள் 2030க்குள் உள் எரிப்பு என்ஜின் (பெட்ரோல் என்ஜின் உள்பட) வாகனங்களின் விற்பனையைத் தடை செய்யவும் திட்டமிட்டுள்ளன. இத்தகைய நிச்சயமற்ற சூழல், டீசல் கார் உரிமையாளர்களுக்கு எதிர்காலக் கவலைகளை உருவாக்குகிறது. அதேநேரம், எலெக்ட்ரிக் வாகனங்கள் (EVs) மற்றும் ஹைபிரிட் (Hybrid) கார்களின் துரித வளர்ச்சி, எரிபொருள் சிக்கனத்தில் டீசலின் பாரம்பரிய அனுகூலத்தைப் பறித்துவிட்டது.
நவீன ஹைபிரிட் கார்கள் டீசல் கார்களின் மைலேஜுக்கு இணையாக குறைந்த நைட்ரஜன் ஆக்சைடு (NOx) உமிழ்வுகளுடன் செயல்படுகின்றன. பேட்டரி செலவுகள் குறைந்ததால், எலெக்ட்ரிக் கார்களும் விலை அடிப்படையில் போட்டியிடத் தொடங்கியுள்ளன. எதிர்காலத் தடைகள் மற்றும் அதிகரித்து வரும் வரிகள் குறித்த நிச்சயமற்ற தன்மையால், டீசல் கார்களின் மறுவிற்பனை மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இது நுகர்வோருக்கு ஒரு அபாயகரமான நிதி முதலீடாக மாறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை காரணங்களினால், பயணிகள் வாகனங்களில் டீசல் கார்களின் எண்ணிக்கை குறைந்தாலும், கனரக போக்குவரத்து (கப்பல் போக்குவரத்து, லாரிகள்) மற்றும் விவசாயத் துறைகளில் டீசல் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிக டார்க் திறன், ஆற்றல் அடர்த்தி இன்றியமையாத இந்தத் துறைகளுக்கு, நம்பகமான எலெக்ட்ரிக் மாற்று வழிகள் இன்னும் மெதுவாகவே வளர்கின்றன. அதுமட்டுமின்றி, கார் நிறுவனங்களிலும் மாருதி சுஸுகியை தவிர்த்து, பெரும்பாலான முன்னணி கார் நிறுவனங்கள் இப்போதும் டீசல் கார்களை விற்பனை செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








