பிரிட்டீஷ்காரங்களை விட பயங்கர மூளை! ஜப்பான்ல இருந்து வந்து இந்திய சந்தையை மாருதி சுஸுகி பிடிச்சது இப்படிதானா!
இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் என்ற பெருமைய மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிக நீண்ட காலமாக தன்கைவசம் வைத்துள்ளது. இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஆனால் சர்வீஸ்தான் (Service) மிகவும் முக்கியமான காரணம் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் காரை வாங்கும் யாரிடமாவது பேசி பாருங்கள்.
சர்வீஸ் நன்றாக உள்ளது என்பதைதான் மிகவும் முக்கியமான காரணமாக கூறுவார்கள். மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நாடு முழுக்க அனைத்து இடங்களிலும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. எனவே இந்தியாவின் எந்த பகுதியில் பயணிக்கும்போது பிரச்சனை என்றாலும், உங்கள் காருக்கு உடனடியாக சர்வீஸ் கிடைத்து விடும்.

அத்துடன் மற்ற பெரும்பாலான நிறுவனங்கள் உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை சர்வீஸ் செய்ய மிகவும் குறைவான செலவே (Cost) ஆகும். இது போன்ற காரணங்களால்தான் மாருதி சுஸுகி நிறுவனம் நம்பர்-1 இடத்தை மிக நீண்ட காலமாக தக்க வைத்து கொண்டுள்ளது.
இந்த சூழலில் கார்களை சர்வீஸ் செய்வதில் மிகவும் பிரம்மாண்டமான சாதனை ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது நிகழ்த்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1.90 கோடி கார்களை சர்வீஸ் செய்திருந்தது. அதன் பின் வந்த 2022-23ம் நிதியாண்டில் இது 2.29 கோடி கார்களாக உயர்ந்தது.

இதை தொடர்ந்து 2023-24ம் நிதியாண்டிலும் மாருதி சுஸுகி நிறுவனம் 2.51 கோடி கார்களை சர்வீஸ் செய்திருந்தது. இந்த வரிசையில் கடந்த 2024-25ம் நிதியாண்டில் 2.73 கோடி கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் சர்வீஸ் செய்து அசத்தியது. இதன் உச்சமாக கடந்த 2025-26ம் நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31), மாருதி சுஸுகி நிறுவனம் 2.84 கோடி கார்களை சர்வீஸ் செய்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.
இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் சர்வீஸ் வரலாற்றில் ஒரு புதிய உச்சமாகும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 5,926 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. இதை வரும் 2030-31ம் நிதியாண்டிற்குள் 8 ஆயிரமாக உயர்த்த மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை இன்னும் மேம்படும்.
இது குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹிஷாஷி டக்கூச்சி கூறுகையில், ''ஆரம்ப நாட்களில் இருந்து விற்பனையை விட சர்வீஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தற்போது வாகன தொழில்நுட்பங்கள் மேம்பட்டு கொண்டே வருகின்றன.
அத்துடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. எனவே எங்கள் சர்வீஸ் நெட்வொர்க்கை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். அத்துடன் வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை திறமையான முறையில் பூர்த்தி செய்ய புதுமையான சர்வீஸ் வழிமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம்'' என்றார்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையில், அதன் 'ரோடு சைடு அஸிஸ்டன்ஸ்' (Roadside Assistance) மிகவும் முக்கியமானது ஆகும். ஒருவேளை உங்கள் காரில் பிரச்சனை என்றால், எந்த நாளாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், மாருதி சுஸுகி 'ரோடு சைடு அஸிஸ்டன்ஸ்' சேவையை பெறலாம்.
1800 102 1800 / 1800 1800 180 ஆகிய டோல்ஃப்ரீ எண்களை நீங்கள் தொடர்பு கொண்டால் போதும். நீங்கள் இருக்கும் இடத்திற்கு மாருதி சுஸுகி ஊழியர்கள் வந்து விடுவார்கள். உங்கள் காரில் என்ன பிரச்சனை என்றாலும், நீங்கள் இந்த எண்களை அழைக்கலாம். அவர்கள் உங்கள் காரை 'டோ' செய்து சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
ஒருவேளை சிறிய பிரச்சனை என்றால், நிகழ்விடத்திலேயே பிரச்சனையை சரி செய்து தந்து விடுவார்கள். பேட்டரி ஜம்ப் ஸ்டார்ட் செய்ய வேண்டியதிருந்தாலும், டயர் ஃப்ளாட் ஆகி விட்டாலும் கூட, நீங்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தை அழைக்கலாம். மாருதி சுஸுகி நிறுவனம் இந்த சேவையில் டூவீலர்களையும் கூட ஈடுபடுத்துகிறது. எனவே அவர்கள் மிகவும் விரைவாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு பிந்தைய சேவையில் தலைசிறந்து விளங்குவதால்தான், அதன் கார்களை வாடிக்கையாளர்கள் மிகவும் நம்பிக்கையுடன் வாங்குகின்றனர். இந்திய சந்தையில் வெற்றி பெற நினைக்கும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், மாருதி சுஸுகி நிறுவனத்தை போன்று விற்பனைக்கு பிந்தைய சேவையில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications