நம்ம கோவையில் இப்படியொரு மெர்சிடிஸ்-பென்ஸ் ஷோரூமா!! மற்ற மாவட்டத்து காரங்க வாய் பிளந்து பார்க்க போறாங்க...
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா (Mercedes-Benz India) நிறுவனம் கோயம்புத்தூரில் அதன் புதிய டீலர்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது. இந்த புதிய பென்ஸ் ஷோரூமை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பட்ஜெட் விலை கார்கள் மட்டுமின்றி, லக்சரி கார்களும் பெரிய தொகையில் விற்பனையாக கூடியவை. அதிலிலும் இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் லக்சரி கார்களின் விற்பனையை பற்றி கூறவே வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். நம் நாட்டில் லக்சரி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனாலேயே புதிய புதிய சொகுசு கார்கள் நம் நாட்டு சந்தையில் தொடர்ச்சியாக விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவில் வசதிகள் மிகுந்த லக்சரி கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், மெர்சிடிஸுக்கும், 2வது இடத்தில் உள்ள மற்றொரு ஜெர்மன் லக்சரி கார்கள் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூவுக்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு மெர்சிடிஸ்-பென்ஸ் நம் நாட்டு சந்தையில் கார்கள் விற்பனையில் கோலோச்சி விளங்குகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸின் கால்தடம் வலுவாக பதிந்துள்ளது.
அதிலிலும் நமது தமிழ்நாட்டில் பென்ஸ் கார்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதை மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கும் முனைப்பில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் உள்ளது. அந்த வகையில்தான் தற்போது தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் 'மார்20எக்ஸ்' (MAR20X) என்ற பெயரில் புதிய டீலர்ஷிப் ஷோரூம் மையத்தை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், தமிழ்நாடு மெர்சிடிஸ்-பென்ஸின் முக்கியமான சந்தைகளுள் ஒன்று. 2021ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த 2022இல் 32% அதிக மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மாநிலத்தில் மேம்பட்டு வரும் மாவட்டமான கோயம்புத்தூரில் திறக்கப்பட்டுள்ள புதிய மார்20எக்ஸ் ஷோரூமில் விற்பனை கார்களை பற்றிய விபரங்களையும், அவற்றிற்கான பெயிண்ட் தேர்வுகளையும் வாடிக்கையாளர்கள் பொருத்தி பார்ப்பதற்காக பிரத்யேகமாக இக்யூ திரை உள்ளது.
அத்துடன் உயர்த்தரத்திலான கார்களை நிறுத்தி வைக்க சிறப்புமிக்க கார்னர் பகுதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் தரத்திலான மாடர்ன் அம்சங்கள் மட்டுமின்றி, பாரம்பரியமான கார் ஷோரூம் அனுபவங்களையும் மெர்சிடிஸ்-பென்ஸின் சில்லறை விற்பனை ஷோரூம் ஆன மார்20எக்ஸ் -இல் பெற முடிகிறது. அதாவது, கார்களை பெரிய திரைகளில் மட்டுமின்றி, நேரிலும் இந்த ஷோரூம்களில் காண முடியும். மேலும், மெர்சிடிஸ்-பென்ஸின் அதிகாரிகள் கலந்துரையாடுவதற்கும் மீட்டிங் பகுதிகளும் இந்த ஷோரூமில் உள்ளன.

மொத்தம் 6071 சதுர மீட்டர்கள் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள இந்த மார்20எக்ஸ் ஷோரூமில் மொத்தம் 25 நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். கார்கள் மட்டுமின்றி, கார் ஷோரூம்களில் கார்களுக்கு தேவையான ஆக்ஸஸரீகளும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மெர்சிடிஸின் இந்த புதிய ஷோரூமிலும் ஆக்ஸஸரீகள் கிடைக்கவுள்ளன. கோயம்புத்தூரில் இந்த புதிய மார்20எக்ஸ் ஷோரூம் ஆனது சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் திறக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் லான்ஸ் பென்னெட்டும், சுந்தரம் மோட்டார்ஸின் நிர்வாக துணை தலைவர் எஸ்.எஸ் ராமசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டனர். இந்திய சந்தையில் வலுவாக காலூன்றி நிற்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தற்சமயம் மொத்தம் 47 நகரங்களில் 124க்கும் அதிகமான விற்பனை மையங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








