ஆளை பார்த்தே கண்டுப்பிடிச்சிடும்!! போலீசுக்கு வேலை மிச்சம்... ஏரியாவுக்கு ஒண்ணு இருந்தால் போதும்!
துபாய் (Dubai) போலீஸாரின் உதவிக்காக, குற்ற செயல்களை தடுக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோந்து கார் கண்காட்சி ஒன்றில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு உரியவர்களின் முகத்தை பார்த்தே அவர்கள் செய்த குற்றத்தை அடையாளம் காணக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ ரோந்து வாகனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகளை கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI)-ஐ பெற்ற சாதனங்கள் செயல்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தின் பயன்பாடு இன்றைய காலத்தில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. இதில் ஆட்டோமொபைல் துறையும் தப்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய கால மாடர்ன் கார்களில் வழங்கப்படும் அடாஸ் (ADAS) உள்ளிட்டவை ஏஐ உலகின் ஒரு பகுதியே ஆகும். ஏஐ சாதனங்களை கொண்டு நம் வாழ்கை முறையையும், பாதுகாப்பையும் மேம்படுத்த பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில், பல்வேறு ஆய்வுகளுக்கு பின் உருவாக்கப்பட்ட உயர்-தொழிற்நுட்ப பேட்ரோல் கார் துபாயில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போலீஸாரின் உதவிக்காக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த கார் அக்டோபர் 16ஆம் தேதி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஜிடெக்ஸ் குளோபல் 2023 கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த டுவிட்டர் பதிவை வாகனத்தின் படங்களுடன் துபாய் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அந்த டுவிட்டர் பதிவில், "360 டிகிரி கேமரா மற்றும் முக-அங்கீகார (Face recognition) தொழிற்நுட்பத்தை கொண்ட செல்ஃப்-டிரைவிங் ரோந்து வாகனம் மூலம் மக்களின் பாதுகாப்பை துபாய் காவல்துறை மேம்படுத்துகிறது" என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பதிவில் கூறப்பட்டு இருப்பது போல், இந்த ஹை-டெக் ரோந்து வாகனம் தன்னிச்சையாக இயங்கக்கூடியது ஆகும்.
துபாய் போலீஸார் கூறுவதை போல், இந்த ரோந்து வாகனத்தில் அட்வான்ஸான 360-டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, தன்னை சுற்றியுள்ள 360 கோணத்தையும் இந்த வாகனத்தால் கண்காணிக்க முடியும். ஸ்மார்ட் தொழிற்நுட்பத்துடன் இயங்கக்கூடியதாக உள்ள இந்த ரோந்து வாகனம் செயற்கை நுண்ணறிவை கொண்டிருப்பதுதான் இதில் ஹைலைட்டே.
இவற்றின் உதவியுடன், குற்றவாளிகளின் முகத்தை வைத்தே அவர்கள் செய்த குற்றத்தை கண்டறிவது மட்டுமின்றி, வாகனங்களின் நம்பர் பிளேட்டையும் ஸ்கேன் செய்து சில வினாடிகளில் அந்த வாகனத்தை பற்றிய விபரங்களை போலீஸாருக்கு வழங்கிவிடும். அத்துடன், நேரடி தகவல்தொடர்பு தொழிற்நுட்பங்களையும் கொண்டிருப்பதால், இந்த ரோந்து வாகனத்தால் காவல்துறையின் மேலிடம் வழங்கும் ஆணைகளை ரியல்-டைமில் உடனுக்குடன் அறிய முடியும்.
இத்துடன், இந்த ஏஐ ரோந்து வாகனங்களுடன் ஆன்-போர்டு ட்ரோன்களை இணைத்து பயன்படுத்த துபாய் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த ஹை-டெக் ரோந்து வாகனமும் ஓர் எலக்ட்ரிக் வாகனம் தான். இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால், வாகனத்தால் அதிகப்பட்சமாக 15 மணிநேரத்திற்கு இயங்க முடியும். இந்த வாகனத்தால், மணிக்கு 5- 7 கிமீ வேகத்தில் இயங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி அபரிதமானதாக மாறி வருகிறது. ஆனால் உண்மையில், இந்த தொழிற்நுட்பங்களின் தேவை ஆட்டோமொபைல் துறையில் மிக அதிமாகவே உள்ளது. ஆதலால், இவ்வாறான ஹை-டெக் வாகனங்கள் அடுத்தடுத்து வெளிவருவது மகிழ்ச்சியான விஷயமே. இவை தன்னிச்சையாக இயங்கக்கூடிய வகையில் இருப்பது இன்னும் பிளஸ் பாயிண்ட்.


Click it and Unblock the Notifications