மோடிக்கு இப்போது வரை ஸ்கார்ப்பியோதான்... பிஎம்டபிள்யூ எப்போது?
கடந்த ஆண்டு பாஜக.,வின் பிரம்மாஸ்திரம் மோடியின் கார் என்று ஒரு செய்தி எழுதியிருந்தோம். அதனை மெய்ப்பிக்கும் விதமாகவே இன்று பாஜக.,வின் உண்மையான பிரம்மாஸ்திரமாக மோடி மாறியுள்ளார்.
1984ம் ஆண்டுக்கு பின் எந்தவொரு கட்சிக்கும் கிடைக்காத அந்த அரிதி பெரும்பான்மை அந்தஸ்துடன் ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறார் மோடி. அவரது அயராத பயணத்திற்கு இன்று வரை தோளோடு தோள் நின்றது அமித் ஷா மட்டுமல்ல. அவரது ஸ்கார்ப்பியோவும்தான்.
அந்தஸ்து மாறும்போது காரை மாற்றும் வழக்கம் கொண்ட பல தலைவர்கள் மத்தியில் தனது ஸ்கார்ப்பியோவை இன்று வரை அவர் மாற்றவில்லை. இன்று விமான நிலையத்திலிருந்து டெல்லியில் உள்ள பாஜக., தலைமை அலுவலகம் வரை ஆஸ்தான ஸ்கார்ப்பியோவிலேயே ஊர்வலமாக வந்தார். அதிலும், படியிலேயே நின்று தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே வந்தார்.

ஸ்கார்ப்பியோ ஏன்?
மார்க்கெட்டில் ஏராளமான சொகுசு கார் மாடல்கள் இருக்கும்போது குஜராத் முதல்வராக நீண்ட காலமாக பதவி வகித்து வரும் நரேந்திர மோடிக்கு ஸ்கார்ப்பியோ மீது அலாதி பிரியம். அப்படி ஸ்கார்ப்பியோவில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

சுற்றுப் பயணம்
கிட்டத்தட்ட 3 லட்சம் கிமீ வரை தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் பயணித்துள்ளார். அதில், பெரும்பாலும் ஆகாய மார்க்கமாக இருந்தாலும், தரை மார்க்கத்தில் செல்லும்போது ஸ்கார்ப்பியோதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். ஸ்கார்ப்பியோவின் இருக்கை அமைப்பு, சிறப்பான எஞ்சின் ஆகியவை குறைந்த தூரம் அல்லது நீண்ட தூர பயணங்களுக்கு மிக ஏதுவானது.

எளிமை
குஜராஜ் முதல்வராக நீண்ட காலமாக இருந்து வரும் மோடிக்கு ஒரு சொகுசு காரில் பயணிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், அவர் அதனை விரும்பவில்லை. அவரது காந்தி நகர் வீடும், ஸ்கார்ப்பியோ காரும் அவரது எளிமையை பரைசாற்றும் விஷயங்களாகவே இன்று வரை இருந்து வருகிறது.

ஸ்கார்ப்பியோவின் சிறப்பு
இது ஓர் இந்திய தயாரிப்பு என்பது முதல் விஷயம். அடுத்ததாக, மஹிந்திரா பிராண்டுக்கு மார்க்கெட்டில் புதிய முகவரியை பெற்றுத் தந்த மாடலும் ஸ்கார்ப்பியோதான். இன்று ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்கள் வந்தாலும் மாதத்திற்கு சராசரியாக 4,000 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி மாடல்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகளின் சாய்ஸ்
அரசியல்வாதிகளின் காராக இருந்து வந்த டாடா சஃபாரியை ஓரம் கட்டிய மாடல் இதுதான். 2002ம் ஆண்டில் மார்க்கெட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2006ம் ஆண்டில் ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடலும், 2007ம் ஆண்டில் பிக்கப் டிரக் மாடலும், 2008ல் ஆட்டோமேட்டிக் மாடலும் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில், புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ கார் தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புல்லட் ப்ரூஃப் வசதி
நரேந்திர மோடியின் உயிருக்கு அதிக அச்சுறுத்தல் இருப்பதால், அவர் பயன்படுத்தும் ஸ்கார்ப்பியோ கார் குண்டு துளைக்காத வசதி கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மோடி மட்டுமல்ல, எந்தவொரு வாடிக்கையாளரும் குண்டு துளைக்காத வசதியை ஸ்கார்ப்பியோ காருக்கு பெறலாம். மஹிந்திராவும், ஸ்நாப் டீல் தளமும் இணைந்து புல்லட் ஃப்ரூப் ஆக்சஸெரீஸ்களை ஆன்லைனில் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த எஞ்சின்
ஸ்கார்ப்பியோவில் 120 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் மாடலை ஆர்டரின் பேரில் மட்டும் விற்பனை செய்யப்போவதாக சமீபத்தில் மஹிந்திரா அறிவித்தது நினைவுகூறத்தக்கது.

இடவசதி
ஸ்கார்ப்பியோவின் மிகப்பெரிய பலம் அதிக இடவசதியை தரும் எஸ்யூவியாக இருப்பதும்தான். மோடியை கவர்ந்த விஷயங்களில் இதன் முன்புற இருக்கையின் இடவசதியும் முக்கிய காரணம்.

மைலேஜ்
ஸ்கார்ப்பியோ மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் நகர்ப்புற டிரைவிங்கில் 10.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலை டிரைவிங்கில் 15.4 கிமீ மைலேஜையும் ஆட்டோமேட்டிக் மாடல் நகர்ப்புறத்தில் 9.6 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 13 கிமீ மைலேஜையும் தருவதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.

வசதிகள்
கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 2 டின் ஆடியோ சிஸ்டம், சன் வைசர், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ மிரர் ஆகியவை உள்பட ஏராளமான வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், சிறப்பான ஹெட்லைட் ஆகிய பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.2009ம் ஆண்டு இந்த பாதுகாப்பு வசதிகள் ஸ்கார்ப்பியோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பிஎம்டபிள்யூ எப்போது?
இன்று வரை நரேந்திர மோடி தனது ஆஸ்தான ஸ்கார்ப்பியோ காரில்தான் டெல்லியில் ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட 2 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களை பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்தி வந்தார். அதே கார்களை அடுத்த பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி பயன்படுத்துவாரா? புதிய காருக்கு மாறுவாரா என்பதையும், அப்படியில்லாமல், தொடர்ந்து ஸ்கார்ப்பியோவையே பயன்படுத்துவாரா என்பதையும் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

உற்சாகம்
மத்தியில் நிலையான ஆட்சி அமைய இருப்பதால் கிடப்பில் போடப்பட்ட தங்களது திட்டங்களை விரைவாக செயல்படுத்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மேலும், புதிய அரசின் கொள்கைகளின் மூலம் ஆட்டோமொபைல் துறை மேம்பாடு அடையும் என்று உற்சாகம் தெரிவித்துள்ளன.



Click it and Unblock the Notifications








