இந்தியாவில் மூன்று அட்டகாசமான எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் மஹிந்திரா... எப்போது தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் மூன்று அட்டகாசமான எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், அது எப்போது என்ற சுவாரஷ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களில், மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், பட்ஜெட் ரக வாகன விற்பனையில் சந்தையை கலக்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம், எலெக்ட்ரிக் ரக வாகன சந்தையிலும் தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்டும் வகையில் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், விரைவில் மூன்று புதிய எலெக்ட்ரிக் ரக நான்கு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்துள்ளது.

அண்மைக் காலங்களாக எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பிரச்னை தீவிரமடைந்து வருகின்றது. இதற்ககு தீர்வும் காணும் விதமாக மின்சார வாகனங்கள் இருக்கின்றன. இவை, சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித கேடு விளைவிக்காமல் நண்பனாக செயல்படும் என்ற காரணத்திற்காக இது வரவேற்தக்கதாக இருக்கின்றது.

ஆகையால், இந்தியாவும் எலெக்ட்ரிக் வாகனங்களை நாடு முழுவதும் ஊக்குவிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை அது அறிவித்து வருகின்றது.
இந்நிலையில், நாட்டின் தேவையை உணர்ந்து, அதில் பங்களிக்கும் விதமாக, வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று விதமான எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

அவை, இ-கேயூவி100, இ-எக்ஸ்யூவி300 ஆகிய பெயர்களில் சந்தையில் களம் காண வரவிருக்கின்றது. இத்துடன், மூன்றாவதாக களமிறங்கும் எலெக்ட்ரிக் கார் ஃபோர்ட் அஸ்பயர் மாடலில் மஹிந்திரா பேட்ஜில் களமிறக்கப்பட உள்ளது.

இதுகுறித்த தகவலை மஹிந்திரா நிறுவனத்தின் எம்டி பவன் கோயன்கா வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கால் நிதியாண்டு விற்பனை அறிவிப்பின்போது பேசிய அவர், "மஹிந்திரா இ-கேயூவி100 எலக்ட்ரிக் கார், நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவும், எக்யூவி300 மாடல் எலெக்ட்ரிக் ரக கார் 2020ம் ஆண்டிற்குள்ளும் களமிறக்கப்பட உள்ளது" என தெரிவித்தார்.

தொடர்ந்து, மஹிந்திரா பேட்ஜில் அறிமுகம் செய்யப்படும் ஃபோர்டு அஸ்பயர்ட் எலெக்ட்ரிக் ரக காரை 2021ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் கூறினார்.
இந்த மூன்று மின் வாகனங்களும், ஏற்கனவே களத்தில் உள்ள இ-வெரிட்டோ எலெக்ட்ரிக் காருடன் இணைந்து சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன.

மஹிந்திரா நிறுவனம் முன்னதாக விற்பனைச் செய்துவந்த சிறிய ரக இ2ஓ எலெக்ட்ரிக் காரை விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டது. இதற்கு, இந்த கார் புதிதாக அறிமுகமாக உள்ள பாதுகாப்பு விதியில் தேர்ச்சி பெறாது என்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இத்துடன், மஹிந்திரா நிறுவனம், மின் வாகனங்களுக்கு புத்தம் புதிய பிளாட்ஃபார்மை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய பிளாட்பாரத்தின்மூலமே, இனி வரவிருக்கும் புதிய மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
அதேசமயம், மஹிந்திராவின் இந்த புதிய மின் வாகனங்கள் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

மேலும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்ட மின் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் தங்களும் கூடுதல் உத்வேகத்துடன் தூண்டும் வகையில் இருப்பதாக அவர் பவன் கோயன்கா கூறியுள்ளார். அதேபோன்று, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சார்ஜர் கருவிகளின் ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தது, நாட்டில் உள்ள சார்ஜிங் மையங்களை அதிகரிக்க வழிவகை செய்யும் என அவர் கருத்து தெரிவித்தார்.

விரைவில் களமிறங்க காத்திருக்கும் இ-கேயூவி100 மற்றும் இதைத்தொடர்ந்து வரவிருக்கும் இ-எக்யூவி300 கார்கள் அண்மைக் காலங்களாக சாலையில் பல பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்த புகைப்படங்கள்கூட அண்மைக் காலங்களாக வாகனதுறை சார்ந்த செய்தி துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

முன்னதாக அறிமுகமாக உள்ள இ-கேயூவி100 எலெக்ட்ரிக் கார், ஒரு முழுமையான சார்ஜில் 120 கிமீ தூரம் வரை பயணம் செய்யும் வகையிலான திறனைப் பெற உள்ளது. இதில், 16kWh திறன்கொண்ட பேட்டரி இணைக்கப்பட உள்ளது. இது, 53பிஎச்பி (40kW) பவரையும், 120 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார்குறித்த மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








