இந்தியாவில் ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தியை நிறுத்தியது மாருதி சுஸுகி!
இந்தியாவில் ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்று ஆல்ட்டோ (Maruti Suzuki Alto). இது என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே 'ஹிட்' அடித்த பெருமை ஆல்ட்டோவிற்கு உண்டு. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஆல்ட்டோ கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக முதலிடத்தை பிடித்தது.

அதன்பின் அந்த அரியணையில் அமர்ந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செலுத்தி கொண்டிருந்தது ஆல்ட்டோ. ஆல்ட்டோ வசம் இருந்த இந்த அரியணையை கடந்த ஆண்டுதான் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) தட்டி பறித்தது. அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்ட்டோவை பின்னுக்கு தள்ளி விட்டு டிசையர் முதலிடத்திற்கு வந்தது.

10 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்த 2008ம் ஆண்டும், 15 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்த 2010ம் ஆண்டும் கடந்தது மாருதி சுஸுகி ஆல்ட்டோ. அதன்பின் 8 ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்த 2018ம் ஆண்டில், 35 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற இமாலய இலக்கை மாருதி சுஸுகி ஆல்ட்டோ எட்டி பிடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. ஆல்ட்டோ காரின் உரிமையாளர்களில் 55 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் மிக கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இதுதவிர 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளும் இங்கு அமலுக்கு வருகின்றன. இதற்கு இணங்கும் வகையில் கார் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் மாடல்களை அப்டேட் செய்து வருகின்றன. அதே நேரத்தில் இந்த விதிமுறைகள் காரணமாக பழமையான சில மாடல்கள் மார்க்கெட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

இப்படியான ஒரு சூழலில், இந்தியாவில் ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு பிறகு, 800 சிசி இன்ஜின் கொண்ட அனைத்து கார்களின் உற்பத்தியையும் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. அதே நேரத்தில் 1.0 லிட்டர் இன்ஜினுடன் கூடிய அடுத்த தலைமுறை ஆல்ட்டோ காரை களமிறக்கும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

வரும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ப்யூச்சர் எஸ் (Future S) கான்செப்ட் அடிப்படையில், அடுத்த தலைமுறை ஆல்ட்டோ உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








