சாதாரண மக்களுக்கும் விஐபி-க்கு இணையான பாதுகாப்பு.. இசட்எஸ் மின்சார காரின் பாதுகாப்பு திறன் வெளியீடு!
விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்க உள்ள எம்ஜி நிறுவனத்தின் மின்சார காரின் பாதுகாப்பு திறன்குறித்த தகவல் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல எம்ஜி நிறுவனம், இந்தியாவிற்கான முதல் எஸ்யூவி ரக ஹெக்டார் காரை அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இதற்கு கிடைத்த இமாலய அளவிலான வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாவது மாடலையும் அறிமுகம் செய்வதற்கான பணியில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது.

அந்தவகையில், இந்தியாவிற்கான இரண்டாவது மாடலாக அதன் எலெக்ட்ரிக் கார் இசட்எஸ் என்னும் மாடலை களமிறக்க இருப்பதாக அது அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த காரின் பாதுகாப்பு அம்சம்குறித்த தகவலை யூரோ என்சிஏபி என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு சந்தைக்கு புதிதாக விற்பனைக்கு வரும் கார்களை க்ராஷ் (விபத்து) செய்து, அதன் மதிப்பு மற்றும் தரம்குறித்த தகவலை வெளியிட்டு வருகின்றது.

அந்தவகையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரையும் அது க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது. இதில், இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதாக யூரோ என்சிஏபி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஐந்திற்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று அந்த கார் அதீத பாதுகாப்பு திறன் கொண்டது என்பதனை வெளிப்படுத்தியுள்ளது.

எம்ஜி நிறுவனம், இந்த எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை நடப்பு மாதத்தின் ஆரம்பத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தநிலையில், இக்காரின் பாதுகாப்புகுறித்த தகவல் வெளியாகி இந்தியர்கள் மத்தியில், அதன் வரவுகுறித்த ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் எல்எச்டி, 5 இருக்கைகளைக் கொண்ட மாடலைத்தான் என்சிஏபி மோதல் வினைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் ஒட்டு மொத்த எடை 1,491 கிலோ ஆகும்.
இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. முக்கியமாக முன் பக்கத்தில் இரு ஏர் பேக்குகளும், தலை, மார்பகம் மற்றும் இடுப்பகுதிகள் பாதிக்காத வண்ணம் பக்கவாட்டு பகுதியிலும் ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கூடுதலாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த காரைப் பரிசோதனைச் செய்ததில், பெரியவர்களுக்கு 90 சதவீதம் பாதுகாப்பை வழங்கும் என்பதை உறுதிச் செய்துள்ளது. இதேபோன்று, குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 85 சதவீதத்தையும், சாலை மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 64 சதவீதத்தையும் அந்த கார் பெற்றிருக்கின்றது.
தொடர்ந்து, பாதுகாப்பு உதவி அம்சங்களில் 70 சதவீத மதிப்பெண்ணைகளையும் அது பெற்றிருக்கின்றது. இதுகுறித்துச் செய்யப்பட்ட சோதனைக்கான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த பாதுகுறித்த தகவலானது, விஐபி-க்கள் பயன்படுத்தும் கார்களில் இருக்கின்ற வசதியைப் போல் காட்சியளிக்கின்றது. ஆகையால், இந்த கார் சாதாரண மக்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற பாதுகாப்பு வசதியை வழங்கலாம் என கூறப்படுகின்றது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் க்ராஷ் டெஸ்ட்குறித்து யூரோ என்சிஏபி அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது, "இந்த காரின் பயணிகளுக்கான பகுதி நல்ல உறுதி தன்மைப் பெற்றிருப்பதை, அதன் முன் பக்கத்தில் செய்யப்பட்ட க்ராஷ் டெஸ்டின் முடிவுகள் தெரிவித்துள்ளது. மனித மாதிரிகளின் முழங்கால் மற்றும் தொடை எலும்புகளுக்கு எந்தவிதமான பாதுப்பும் ஏற்படவில்லை. காரின் வெவ்வேறு இருக்கையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு கிடைக்கின்றது" என்றனர்.

இதுமட்டுமின்றி, உடலின் அனைத்து முக்கியமான பகுதிகளுக்கும் நல்ல பாதுகாப்பை இந்த எலெக்ட்ரிக் கார் வழங்குகின்றது. இதன்காரணமாகவே, அதிகபட்ச ரேட்டிங் பாயிண்டுகளை அந்த கார் பெற்றிருப்பதாக என்சிஏபி அமைப்பின் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த காரின் அவசரகால தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், திடீரென இந்த பிரேக்கிங் செயல்படுவதால் காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு சவுக்கடி விழுவதைப் போல் உணர்வு ஏற்படலாம் கூறப்படுகின்றது.
எம்ஜி நிறுவனம், இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை ஃபோர்டம் சார்ஜ் மற்றும் டிரைவ் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து களமிறக்க உள்ளது.

இந்த கூட்டணி நிறுவனங்கள் காருக்கு தேவையான ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களைக் கட்டமைக்க உதவும். முக்கியமாக எம்ஜி நிறுவனத்தின் ஷோரூம்களில் முதல்கட்டமாக ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட உள்ளன. தொடர்ந்து, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் படிப்படியாக ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

இத்துடன், ஏசி சார்ஜ் நிலையங்களுக்காக டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்துடன் எம்ஜி நிறுவனம் கூட்டணி வைக்க இருக்கின்றது. இது பெருவாரியான பொது வாகன நிறுத்துமிடங்களில் ஏசி சார்ஜிங் நிலையங்களை நிறுவ உள்ளது.
எம்ஜி நிறுவனம் இந்த காருக்கான முன்பதிவை விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான தேதிகுறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை படிக்க இங்கே க்ளிக்செய்யவும்.


Click it and Unblock the Notifications








