டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரியர்களுக்கு ஒரு 'குட் நியூஸ்'!!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின்கள் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து ஒரு நல்ல செய்தி டொயோட்டாவிடமிருந்து வந்துள்ளது. அதன் விபரங்களை பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு ஏற்றவாறு, எஞ்சின்களை மேம்படுத்தும் முனைப்பில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், பெட்ரோல் எஞ்சின்களைவிட டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக மேம்படுத்துவதற்கு அதிக சவால்களும், முதலீடும் தேவைப்படுகிறது.

இதனால், மாருதி உள்ளிட்ட பெரும் கார் நிறுவனங்கள் டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளன. எனினும், டீசல் கார்களுக்கான மவுசு தொடர்ந்து இருந்து வருவதால், பெரும் வர்த்தக பாதிப்பை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால், பல நிறுவனங்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எஞ்சின்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளன.

அந்த வகையில், பிரிமீயம் எம்பிவி, எஸ்யூவி கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் டொயோட்டா கார் நிறுவனம் டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்த முடிவு செய்துள்ளது. ஏனெனில், டொயாோட்டா நிறுவனத்தின் முன்னணி மாடல்களான இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார்களில் டீசல் எஞ்சின் மாடல்களுக்கே அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

இதனை மனதில் வைத்து, டொயோட்டா கார் நிறுவனம் டீசல் எஞ்சின் தேர்வுகளை தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இருப்பினும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர்தான் பிஎஸ்-6 மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்த இருப்பதால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களின் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளை சமாளிக்கும் பொருட்டு, பிஎஸ்-6 டீசல் எஞ்சின்கள் மட்டுமின்றி, ஹைப்ரிட் மற்றும் பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் டொயோட்டா இறங்கி உள்ளது.

இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் கூறுகையில்," சந்தையின் தேவை மற்றும் புதிய விதிமுறைகளை கூர்ந்து கவனித்து முடிவுகளை எடுத்து வருகிறோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும் முடிவு செய்துள்ளோம்.

மின்சார வாகனங்கள் போன்று, ஹைப்ரிட் ரக வாகனங்களுக்கும் மானியம் உள்ளிட்ட சிறப்புச் சலுகை திட்டங்களை அரசு வழங்கினால் நிச்சயம் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து பிஎஸ்-6 தரமுடைய டீசல் எஞ்சின்களுடன் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவே அமைந்துள்ளது. ஏனெனில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் டீசல் எஞ்சின் மாடல்களையே வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications








