கோரத்தாண்டவமாடும் கொரோனா... பூஜ்யமானது விற்பனை... விழி பிதுங்கி நிற்கும் வாகன நிறுவனங்கள்!
கொரோனா கொடுமையால் இந்தியாவில் ஒரு வாகனம் கூட விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கார், பைக் உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்புடன் விழி பிதுங்கி நிற்கின்றன.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா கோவிட் 19 வைரஸ் உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்து கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் கொடுத்து உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பொது முடக்கம் என்ற ஆயுதத்தை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளன. இருப்பினும், கொரோனாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் சில மாநில அரசுகள் தடுமாறி வருகின்றன.
MOST READ: நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்

இந்த நிலையில், கொரோனா தாக்கத்தை குறைப்பதற்காக கடந்த மார்ச் 24ந் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், கார், பைக் உள்ளிட்ட ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளன. அதேபோன்று, மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதாலும், ஊரடங்கு காரணமாகவும் டீலர்களும் ஷோரூம்களை மூடி வைத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்திலாவது 20 தேதி வரை விற்பனை ஓரளவு இருந்தது. ஆனால், அதன்பிறகு ஒரு மாதத்தை தாண்டி வாகன உற்பத்தி, விற்பனை அடியோடு முடங்கி இருக்கிறது. இதனால், இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு மாதத்தில் ஒரு வாகனம் கூட விற்பனையாகாத நிலை பதிவாகி உள்ளது.

கடந்த மாதத்தில் ஒரு கார் கூட விற்பனை செய்யப்படவில்லை என்று மாருதி சுஸுகி, டொயோட்டா, எம்ஜி மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதங்கத்துடன் தங்களது மாத விற்பனை நிலவரம் தொடர்பான செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு ரூ.2,500 கோடி வரை ஆட்டோமொபைல் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்லாயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதோடு, இந்த நிலைமை எப்போது சரியாகும் என்று தெரியாமல், மக்களும், வாகன உற்பத்தி துறை உள்ளிட்ட அனைத்து தொழிற்துறைகளும் குழப்பத்தில் உள்ளனர்.

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் சிறிய அளவிலான உற்பத்திப் பணிகளை துவங்கி இருப்பதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. எனினும், அடுத்த வாரத்தில் கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் உள்ள கார் உள்ளிட்ட வாகன ஆலைகள் நிபந்தனையுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டீலர்கள் திறக்கப்பட்டு விற்பனை ஓரளவு நடக்கத் துவங்கினால் மட்டுமே உற்பத்தி செய்வது பலன் அளிக்கும்.எனவே, உற்பத்தியை துவங்குவதற்கு சிறப்பு அனுமதி கிடைத்தும் பல நிறுவனங்கள் ஆலையை திறப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

அடுத்த வாரம் பராமரிப்புப் பணிகளை துவங்கி சிறிய அளவில் உற்பத்தியை துவங்குவதற்கான முயற்சிகளில் கார், பைக் நிறுவனங்கள் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் பெரும்பாலான பகுதிகளில் டீலர்களும் திறக்கப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








