அச்சச்சோ தப்பு நடந்துடுச்சு! குறிப்பிட்ட மாடலை அவசர அழைப்பு விடுக்க தயாராகும் ஹூண்டாய்! ஏன் தெரியுமா
அண்மையில் களமிறக்கப்பட்ட புதுமுக மாடலை அவசர அழைப்பு விடுக்க ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகின்றது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய முதல் மின்சார கார் கோனா எஸ்யூவி. இதுவே, அந்த நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரும்கூட. எனவேதான் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இந்த காரின் மீது நல்ல மதிப்பு நிலவி வருகின்றது. இதன் எதிரொலியாக கணிசமான விற்பனை எண்ணிக்கையையும் அது பெற்று வருகின்றது.

இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் அவசர அவசரமாக இக்கார்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரையில் தயாரிக்கப்பட்ட கோனா மின்சார கார்களுக்கு அழைப்பு விடுக்கும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கியிருக்கின்றது.

இந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட 25,564 யூனிட் கோனா மின்சார கார்கள் மக்கள் பயன்பாட்டில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த அதிகபட்ச எண்ணிக்கையில் இருக்கும் கார்களையே ஹூண்டாய் நிறுவனம் தற்போது அழைத்திருக்கின்றது. பேட்டரியில் ஏற்பட்டிருக்கும் சிறிய தொழில்நுட்ப கோளாறே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

ஆனால், இந்த சிறிய கோளாறை எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடாது என தென்கொரிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று (10 அக்டோபர்) அது வெளியிட்டுள்ள அறிக்கையில், கோனா மின்சார கார்களின் பேட்டரியில் ஏற்பட்டிருக்கும் சிறிய கோளாறு, மிக எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தக் கூடியது" என கூறியிருக்கின்றது.

எனவேதான், ஹூண்டாய் நிறுவனம் கோனா மின்சார கார்களை அவசர அவசரமாக திரும்பி அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த அழைப்பின் அடிப்படையில் பேட்டரிகள் மாற்றித் தரப்பட இருக்கின்றன. மேலும், மென்பொருள் அப்டேட்டையும் ஹூண்டாய் கோனா மின்சார கார்களில் செய்ய இருக்கின்றது.

இந்த பணியை இன்னும் ஒரு சில நாட்களிலேயே ஹூண்டாய் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஈடி ஆட்டோ வெளியிட்டுள்ள செய்தியில், வருகின்ற 16ம் தேதி முதல் கோனா மின்சார கார்களை அழைக்கும் பணியில் ஹூண்டாய் ஈடுபட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையே, தென்கொரிய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலும் கூறுகின்றது.

ஏற்கனவே, பெறப்பட்ட புகார்கள் மற்றும் விபத்து சம்பவங்களின் அடிப்படையிலேயே ஹூண்டாய் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது. இதுவரை 13 தீ விபத்து சம்பவங்கள் கோனா மின்சார கார்களைச் சார்ந்து அரங்கேறியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கனடா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் இந்த சம்பவம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இந்தியாவில் விற்பனையாகும் கோனா மின்சார கார் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஒருவேலை இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்ட மின்சார கார்களிலும் கோளாறு இருந்தால், எந்த தாமதமும் இன்றி கோனா மின்சார கார் விற்பனையாளர்களின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும்.

கோனா மின்சார கார்களில் தற்போது எல்ஜி கெம் நிறுவனத்தின் பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பேட்டரிகளிலேயே தற்போது கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த உடனடியாக கருத்துகளை தெரிவிக்க முடியாது என அந்நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

கோனா மின்சார கார், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிக ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கின்றது. குறிப்பாக, அனைத்து மின் பொருள்களும் அனைத்து வைக்கப்பட்ட நிலையில், 30 கிமீ என்ற வேகம் குறையாமல் இயக்கியபோது ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை கோனா வழங்கியது. சிறப்பு ஆய்வின்போதே இத்தகைய ரேஞ்ஜை அது வெளிப்படுத்தியது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஆனால், வழக்கமான பயன்பாட்டின்போது இக்கார் 452 கிமீ தூரம் மட்டுமே முழுமையான சார்ஜில் செல்கின்றது. இந்த திறனை 39.2kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்குகின்றது. இக்காரில் அதிகபட்சமாக 134 பிஎச்பி மற்றும் 395 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்திய மதிப்பில் ரூ. 25.30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.


Click it and Unblock the Notifications








