ரூ. 10 கோடி மதிப்புள்ள புதிய கார் வாங்கும் திட்டத்தை ஒத்தி வைத்த குடியரசு தலைவர்... ஏன் தெரியுமா?
ரூ. 10 கோடி மதிப்புள்ள அதிநவீன பாதுகாப்பு திறன் கொண்ட புதிய கார் வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாக குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயிர் கொல்லி கொரோனா வைரசால் உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோவொரு வகையில் பாதிப்பை சந்தித்திருக்கின்றனர். ஏழை, எளியவர் மற்றும் பணக்காரர் என பாராபட்சம் இல்லாமல் அனைவரையும் தனது பாதிப்பு வலைக்குள் இழுத்துப்போட்டுள்ளது இந்த கொடிய வைரஸ் கொரோனா.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பலரின் வாழ்க்கையை இந்த வைரஸ் தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது என்றே கூறலாம்.
இதற்கும் நமது குடியரசு தலைவருக்கும் என்ன சம்பந்தம்? என்றுதானே கேட்கிறீர்கள். வாருங்கள் இதுகுறித்த தகவலைதான் கீழே காணவிருக்கின்றோம்.

தற்போது நாட்டில் இதுவரை 78 ஆயிரத்திற்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இது குறைவதற்கான அறிகுறி துளியளவும் தெரியவில்லை. ஏனென்றால் இது வீசிய அலை பேயலையாக இருக்கின்றது. எனவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகின்றது.

இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்துத்துறையும் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. எனவே, மக்கள் இதுவரைச் சந்தித்திராத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தங்களின் அனைத்து திட்டங்களையும் தற்போது தள்ளி போட்டு வருகின்றனர். அந்தவகையில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முதல் புதிய வாகனங்கள் வாங்குவது வரையிலான அனைத்திற்கும் தற்காலிக முட்டுக்கட்டையைப் போட்டுள்ளனர்.

இதேமாதிரியான ஓர் நடவடிக்கையைதான் நாட்டின் முதல் குடிமகன் என்றழைக்கப்படும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மேற்கொண்டுள்ளார்.
இவர் தற்போது பயன்படுத்தி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் மாடல் காருக்கு பதிலாக இதே மாடலின் புதிய வெர்ஷனாக விற்பனைக்கு வந்திருக்கும் எஸ்600 புல்மேனை வாங்குவதாக திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மக்கள் பலர் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்ட குடியரசு தலைவர், தன்னுடைய புதிய கார் வாங்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.
சுமார் ரூ. 10 கோடி மதிப்பில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் எஸ் 600 புல்மேன் லிமோசைன் வாங்குவதாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த தொகையை தற்போது நிதி போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குடியரசு தலைவர் தற்போது பயன்படுத்தி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 புல்மேன் பழைய பதிப்பு மாடல் ஆகும். இதனாலயே இதனை மாற்றி புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இதன் அடுத்த தலைமுறை மாடலை வாங்க திட்டமிடப்பட்டது. ஆனால், நாடு தற்போது இருக்கும் நிலையில் புதிய கார் வாங்கும் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எண்ணிய அவர், இந்த எண்ணத்தைக் கை விட்டார்.

மேலும், கொரோனாவிற்காக நிதி கோரப்பட்டு வரும்நிலையில், இந்த உச்சபட்ச தொகையை அதற்காக பயன்படுத்திக் கொள்ளவும் கூறியிருக்கின்றார். தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பான கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் லிமோசைன் காரும் ஒன்றாகும். இதனாலயே நம் முன்னாள் ஜனாதிபதிகள் சிலரும் இந்த காரையே பயன்படுத்தியிருக்கின்றனர்.
MOST READ: இந்தியாவில் தான் இது நடந்ததா...? கொரோனாவினால் ஏற்படும் சில நன்மைகள்...

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள ஒரு சில முக்கியமான அரசியல் கட்சி தலைவர்களும் இந்த காரையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அதிக பாதுகாப்பை விரும்பும் ஒரு சில தொழிலதிபர்களின் விருப்பத் தேர்விலும் இந்த காரே இடம் பெற்றிருக்கின்றது.

தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பயன்படுத்தும் பென்ஸ் எஸ் 600 புல்மேன் கார், எந்தவிதமான தாக்குதலையும் சமாளிக்கும் திறனைக் கொண்டது ஆகும். இப்போது புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் எஸ் 600 புல்மேன் முந்தை மாடலைக் காட்டிலும் அதி திறன் வாய்ந்ததாக இருக்கின்றது. இந்த கார் 21.3 அடி நீளமானது ஆகும். இது துப்பாக்கி குண்டு முதல் வெடி குண்டு வரை அனைத்தையும் தாங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இதற்காக விஆர்10 பால்லிஸ்டிக் பாதுகாப்பு அம்சம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அம்சம் வெடிகுண்டுகளில் இருந்து மட்டுமில்லாமல் எந்திர துப்பாக்கியில் (machine gun) இருந்தும் பயணிகளைப் பாதுகாக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த காரின் கீழ் பக்க கட்டுமானம் மிகவும் உறுதி வாய்ந்ததாக இருக்கின்றது.

அதாவது, கன்னி வெடி போன்றவற்றின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில் உறுதியான கட்டமைப்பு காரின் அடிப்பகுதிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று, காரின் அலாய் வீல் மற்றும் டயர்களுக்கும் புல்லட் ப்ரூஃப் தன்மையே வழங்கப்பட்டிருக்கின்றது. இது காட்டுத் தீயில் சென்றால் கூட அவ்வளவு எளிதில் தீ பிடிக்காது.

தொடர்ந்து, காரில் உட்பகுதியில் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இது, விஷ வாயு தாக்குதலின்போது பாதுகாப்பு கவசமாக செயல்படும். இத்தகைய காரைதான் குடியரசு தலைவரின் பயணங்களுக்கு வாங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்கு அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வாயிலாக குடியரசு தலைவர் தெரிவித்திருந்தார்.

அதேசமயம், சமீபத்தில் மக்கள் மத்தியில் பேசிய நமது நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் தொழில்துறைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக, உள்ளூர் தயாரிப்புகளை அதிகமாக வாங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்து. ஆனால், இது குடியரசு தலைவரின் வாகன விவகாரத்தில் எம்மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications








