நெக்ஸான் மின்சார காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்..! மலிவான மின்சார காராக மாற்ற டாடா அதிரடி..!
டாடா நிறுவனம் அதன் மின்சார காரான நெக்ஸான் மாடலுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆனால், இவற்றின் உச்சபட்ச விலை, அதன் விற்பனையை குழந்தை பருவத்திலேயே நிலைநிற்க வைத்துள்ளது. இதற்கு, மின் வாகனங்களுக்கான போதிய கட்டமைப்பு வசதி இல்லாததும் ஓர் முக்கிய காரணமாகும். இருந்தாலும் மின் வாகனங்களின் விலை மிக அதிக இருப்பதனாலயே, பலருக்கு எட்டாக் கனியாகவே அவை இருக்கின்றன.

இதை உணர்ந்த டாடா நிறுவனம், அதன் மின்சார காரான நெக்ஸான் மாடலுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் இந்தியாவில் களமிறங்கிய முதல் மின்சார கார் இதுவே ஆகும். இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றது.

இதன் விலையும்கூட மேற்கூரிய மாடல்களுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகின்றது. ஆம், தற்போது விற்பனையில் இருக்கும் மின்சார கார்களைக் காட்டிலும் டாடா நெக்ஸான்தான் மிக மிகக் குறைந்த விலையுடைய காராக இருக்கிறது. இதற்கு எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 13.99 லட்சங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இந்த காரைதான் மாதச் சந்தா திட்டத்தில் வழங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டணம் பற்றிய தகவலையும் அது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இக்காரை 36 மாதங்களுக்கு சந்தா திட்டத்தின்படி பயன்படுத்த விரும்பினால் அதற்கான கட்டணமாக ரூ. 41,900 செலுத்த வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று, 18 மாதங்கள் மற்றும் 26 மாதங்கள் தேர்வும் வழங்கப்பட உள்ளன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை மேலும் மலிவானதாக மாற்றும் நோக்கிலேயே டாடா நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. இதில், 18 மாத திட்டத்திற்கு ரூ. 47,900 மாத வாடகையும், 24 மாதங்களுக்கு ரூ. 44,900 மாத வாடகையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சேவைக்காக டாடா நிறுவனம் ஓரிக்ஸ் ஆட்டோ எனும் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது. இந்த நிறுவனமே டாடா நெக்ஸான் மின்சார கார்களை மாதச் சந்தா திட்டத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. டாடாவின் இந்த சிறப்பு சேவை நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டிருக்கின்றது.

தலைநகர் டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த சேவைத் தொடங்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் இந்த நகரங்களில்தான் மின்வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்புகள் குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. எனவேதான் முதல் அறிமுகமாக இந்த நகரங்களை டாடா-ஓரிக்ஸ் ஆட்டோ கூட்டணி தேர்வு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து நாட்டின் பிற நகரங்களிலும் இந்த சேவையை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எக்ஸ்எம், எக்ஸ்இசட்+ மற்றும் லக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவை ரேஞ்ஜ் மற்றும் வசதிகளின் அடிப்படையில் மாறுபட்டுக் காணப்படுகின்றன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 95kW திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 129 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், முழுமையான சார்ஜில் 312 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும். இதற்காக புதிய ஜிப்ட்ரோன் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பை டாடா நிறுவனம் இக்காரில் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய மின் ஆற்றலை 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கும்.

இதுபோன்று பல்வேறு சிறப்பம்சங்களை டாடா நெக்ஸான் கொண்டிருப்பதால் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார காராக இது உருமாறிக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் டெலிவரி பணிகள் சென்னை உட்பட ஒரு சில நகரங்களில் மட்டும் அண்மையில் தொடங்கின. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இந்த கார் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மாடலாக உருவாகி வருவதுனாலயே மாதச் சந்தா திட்டத்தை டாடா அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








