டீலர்ஷிப்களில் ரகசியமாக துவங்கப்பட்ட டொயோட்டா இன்னோவா & ஃபார்ச்சூனர் பிஎஸ்6 கார்களுக்கான முன்பதிவு.!
வருகிற 6ஆம் தேதி முதல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்படவுள்ளதாக ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த புதிய கார்களுக்கான முன்பதிவுகள் டீலர்ஷிப்களில் ரகசியமாக தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெளியாகியுள்ள தகவலில் டீலர்ஷிப்கள் ரூ.50,000ல் இந்த கார்களுக்கான முன்பதிவை ஏற்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை புனேவில் உள்ள டீலர் ஒருவர் உறுதிப்படுத்தியும் உள்ளார். அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் வரும் 6ஆம் தேதியில் இருந்து துவங்கப்படவுள்ள நிலையில் இந்த 2020 மாடல்களின் டெலிவிரிகள் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாதத்தின் துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக டொயோட்டா நிறுவனம் முன்னதாக கூறியிருந்தது.

தற்சமயம் டொயோட்டா நிறுவனத்தின் சிறந்த மாடல்களாக விளங்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களின் பிஎஸ்4 வெர்சன்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக டீலர்ஷிப்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதனால் தான் பிஎஸ்6 மாடல்களின் முன்பதிவுகள் ரகசியமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதிக்கு முன்னதாக தொடங்கப்பட்டுள்ளதாம்.

இந்த இரு மாடல்கள் மட்டுமின்றி யாரிஸ் பிஎஸ்6 மாடலின் முன்பதிவையும் டீலர்ஷிப்கள் ஏற்று வருகின்றனர். டீலர்ஷிப்கள் கூறுவதுபோல் டொயோட்டா நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனை காராக உள்ள இன்னோவா க்ரிஸ்ட்டா இந்த பிஎஸ்6 அப்டேட்டால் ரூ.1.5 லட்சம் வரையில் விலை அதிகரிப்பை பெறவுள்ளது.

இந்த அதிகப்படியான விலை அதிகரிப்பிற்கு காரணம், டொயோட்டா நிறுவனம் க்ரிஸ்ட்டாவின் பிஎஸ்6 வேரியண்ட்டில் புதியதாக கேட்டலிடிக் ரெடக்ஷன் தொழிற்நுட்பத்தையும் புதிய டீசல் ஃபில்டரையும் பொருத்தியிருப்பது தான்.

மேலும் இந்நிறுவனத்தில் இருந்து வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டீசல் வேரியண்ட்டுடன் பிஎஸ்6-க்கு மாற்றப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் மட்டும் தான் விற்பனையாகவுள்ளன. ஏனெனில் டொயோட்டா எடியோஸ் உள்ளிட்ட டீசல் என்ஜின் தேர்வை கொண்ட மாடல்கள் புதிய உமிழ்வு விதியால் சமீபத்தில் தான் இந்தியாவில் இருந்து விடைபெற்றன.

யாரிஸ், க்ளான்ஸா போன்ற கார்களும் பெட்ரோல் வேரியண்ட்டை மட்டும் தான் பெற்று பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ளன. அதேபோல் டொயோட்டா நிறுவனத்தின் சூப்பர்-லக்சரி மாடலான வெல்ஃபயர் ஏப்ரல் 1 முதல் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜினை மட்டும் தான் பெறவுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, டொயோட்டா மாடல்களின் டிசம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் இந்நிறுவனம் கடந்த மாதத்தில் சுமார்38 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிலை இந்நிறுவனத்திற்கு வரும் மாதங்களுக்கும் தொடரும் என்றே தெரிகிறது. இதற்கான காரணத்தை விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் பிஎஸ்6 மாடல்களின் முன்பதிவு ரகசியமாக நடத்துப்படுவது, மீதி தேங்கியிருக்கும் பிஎஸ்4 கார்களை விற்க டீலர்ஷிப்கள் வகுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த இரு மாடல்களும் இந்திய சந்தையில் மிக பிரபலமானவை என்பதால், இவற்றின் பிஎஸ்6 மாடல்களுக்கான முன்பதிவுகள் அதிகளவில் நடைபெறும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








