இன்னோவாவைவிட விலை குறைவான எம்பிவி காரை களமிறக்க டொயோட்டா முடிவு
இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரைவிட விலை குறைவான புத்தம் புதிய எம்பிவி கார் மாடலை டொயோட்டா அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது டொயோட்டா பிரியர்களின் ஆவலை எகிற வைத்துள்ளது.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் இன்னோவா க்ரிஸ்ட்டா மூலமாக மிக வலுவான சந்தை பங்களிப்பை டொயோட்டா வைத்துள்ளது. டிசைன், இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்கள், மறுவிற்பனை மதிப்பு ஆகிய அனைத்திலும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா தன்னிகரில்லா மாடலாக உள்ளது.

இந்த நிலையில், பட்ஜெட் அடிப்படையில் இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பலருக்கும் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனை கருத்தில்கொண்டு மாருதி எர்டிகா கார் அடிப்படையிலான ரீபேட்ஜ் மாடலை டொயோட்டா அறிமுகப்படுத்த இருப்பது தெரிந்ததே.

ஆனால், எர்டிகாவுக்கும், இன்னோவாவுக்கு இடையிலான விலையில் புத்தம் புதிய எம்பிவி கார் மாடலை அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புத்தம் புதிய மாடலானது சி ரக எம்பிவி கார் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

இந்த புதிய எம்பிவி கார் மாடலை சுஸுகி நிறுவனத்துடன் இணைந்து டொயோட்டா உருவாக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் 2023ம் ஆண்டு இந்த புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த புதிய சி ரக எம்பிவி கார் மாடல் மட்டுமின்றி, புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலையும் இந்த கூட்டணி தயாரித்து வருகிறது. வரும் 2022ம் ஆண்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

புதிய மிட்சைஸ் எஸ்யூவி கார் மாடலானது எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடலகளுக்கு போட்டியாக இருக்கும். இந்த இரண்டு மாடல்களிலுமே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா ஆலையில் இரண்டு கார்களும் உற்பத்தி செய்யப்படும். மிக சவாலான விலையில் இரண்டு புதிய மாடல்களையும் நிலைநிறுத்தவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதில், டொயோட்டாவின் புதிய எம்பிவி கார் மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் சில மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கு போட்டியான பட்ஜெட்டில் வரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








