தலைவிரித்தாடும் கொரோனா... அஞ்சாமல் ஜூலையில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய 4 கார்கள் இவை தான்...
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளின் அறிமுகங்களை சில மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளன. இருப்பினும் ஊரடங்கு தளர்வு கொண்டுவரப்பட்டுள்ள பகுதிகளில் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் வழக்கமான வேலைகளை மீண்டும் துவங்கியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் இணையம் மூலமாக வாகனங்களை அறிமுகம் செய்வதை பெரும்பாலான நிறுவனங்கள் தேர்வு செய்து வருவதால், இந்த ஜூன் மாதத்தில் சில புதிய தயாரிப்புகளின் அறிமுகங்களை பார்த்தோம். இதனை தொடர்ந்து அடுத்த ஜூலை மாதத்திலும் இவ்வாறான முறையில் சில கார்கள் அறிமுகத்திற்கு தயாராக நிற்கின்றன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிட்டி
புதிய தலைமுறைக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள ஹோண்டா சிட்டி மாடல் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்தது. ஆனால் கொரோனாவினால் இதன் அறிமுகம் தாமதமான நிலையில் இந்த செடான் ரக காருக்கான முன்பதிவுகளை ஹோண்டா நிறுவனம் தற்சமயம் ஏற்று வருகிறது.

இதனால் அடுத்த மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய சிட்டி காரில் தயாரிப்பு நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை வழங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இதன் டீசர் வீடியோ குறித்த தகவல்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
தற்சமயம் விற்பனையில் உள்ள ஹெக்டர் எஸ்யூவி மாடலின் 7-இருக்கை வெர்சனாக வெளிவரும் ஹெக்டர் ப்ளஸ் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியதை தொடர்ந்து அடுத்த மாதம் சந்தையில் அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

7-இருக்கை மட்டுமில்லாமல் 6-இருக்கை தேர்விலும் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த புதிய எம்ஜி காருக்கு 2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. இதற்கு போட்டியாக தற்போதைக்கு எந்த காரும் சந்தையில் இல்லாவிடினும் விரைவில் டாடா நிறுவனத்தில் இருந்து கிராவிட்டாஸ் மாடலும், மஹிந்திராவில் இருந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலும் அறிமுகமாகவுள்ளன.

மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி
இந்த ஊரடங்கு நேரத்திலும் ஜூன் மாத துவக்கத்தில் புதிய தலைமுறை ஜிஎல்எஸ் காரை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டு வந்திருந்தது. இந்த நிலையில் தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக இக்யூசி காரை அடுத்த ஜூலை மாத துவக்கத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான மெர்சிடிஸ்-பென்ஸின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ப்ராண்ட்டான இக்யூ-வின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் முன்புற அச்சிற்கு ஒன்று, பின்புற அச்சிற்கு ஒன்று என இரு எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 400கிமீ ரேஞ்ச்சை பெற்றுள்ளது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக்
இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி நடைமுறைக்கு வந்த பிறகு புதிய தயாரிப்புகள் எதையும் ஆடி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை. இதனால் இந்நிறுவனத்தில் இருந்து தற்சமயம் சந்தையில் ஏ6, க்யூ8 மற்றும் ஏ8எல் என்ற மூன்று மாடல்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான் தற்போது நான்காவது மாடலாக ஸ்போர்ட்பேக் ஸ்டைலில் ஆர்எஸ்7 கார் களமிறங்கவுள்ளது. வருகிற ஜூலை மாத முதல் பாதியில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள இந்த காரின் டெலிவிரி பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவுகளை ரூ.10 லட்சம் என்ற டோக்கன் தொகையுடன் ஆடி நிறுவனம் ஏற்று கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு கார்களில் எதன் ஒன்றின் அறிமுகம் குறித்த உறுதியான தகவலும் தற்போதைக்கு இல்லை. இதனால் இந்த நான்கும் நிச்சயம் அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் என்பதை உறுதியாக கூற இயலாது.


Click it and Unblock the Notifications








