ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல்... 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை நீங்கள் ஓட்ட முடியுமா?
அரசு வாகனங்களுக்கான ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு (Vehicle Scrappage Policy), ஒரு வழியாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் அரசு வாகனங்களுக்கு மட்டுமே இந்த ஸ்கிராப்பேஜ் கொள்கை பொருந்தும்.

இந்த புதிய கொள்கையின் கீழ், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும். வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு, நடப்பாண்டு ஜனவரி 25ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இந்த புதிய ஸ்கிராப்பேஜ் கொள்கை அமலுக்கு வரும்.

வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை மிக நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்தது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை இதனை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தது. பழைய வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட்டு விடும் என்பதால், புதிய வாகனங்களுக்கான தேவை உயரும். எனவே புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் நம்பிக்கை.

தற்போது வெளியாகியுள்ள இந்த முதற்கட்ட அறிவிப்பு அவர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. அத்துடன் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையும் இதன் மூலமாக குறைக்கப்படும். பொதுவாக பெட்ரோல், டீசலில் இயங்கும் பழைய வாகனங்கள்தான் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்துகின்றன. ஆனால் புதிய கொள்கையின் கீழ், அவை ஸ்கிராப் செய்யப்பட்டு விடும்.

ஆனால் தங்களின் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் உரிமையாளர்களுக்கு, புதிய வாகனங்களை வாங்குவதற்கான மானியம் போன்ற சலுகைககள் வழங்கப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான ஸ்கிராப்பேஜ் கொள்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக, வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை தவிர இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு 'பசுமை வரி' விதிக்கும் திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திட்ட முன்வரைவு மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 'பசுமை வரி' குறித்த விரிவான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பசுமை வரியின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு நம்புகிறது. அதாவது பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்படுவதால், அவற்றுக்கு பதிலாக புதிய அல்லது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை பயன்படுத்தும் எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கும் என்பது மத்திய அரசின் திட்டம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








