டாடா கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நேரத்தில் முக்கிய மாடல்களின் உற்பத்தி நிறுத்தம்! இது உண்மை தானா?..
டாடா நிறுவனம் அதன் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸும் ஒன்று. தற்போது அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வரும்நிலையில் பொதுமுடக்கத்தை மாநில அரசு கையிலெடுத்துள்ளது.

இதனால், மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் பெரிதும் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. உதாரணமாக மஹிந்திரா நிறுவனம், அதன் ஆலையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்திருக்கின்றது.

வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் மஹிந்திரா களமிறங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மஹாராஷ்டிராவின் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் டாடா நிறுவனமும் இதுபோன்றதொரு நடவடிக்கையில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுவனம், உற்பத்தி பணிகளுக்கு தற்காலிக தடையை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், டாடாவின் முக்கிய தயாரிப்புகளான டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், ஹாரியர் மற்றும் புதுமுக காரான சஃபாரி ஆகியவற்றின் உற்பத்தி பணிகள் தடைப்பட இருக்கின்றன.

டாடாவின் இந்த நடவடிக்கை மேற்கூறிய கார் மாடல்களின் விற்பனை பதம்பார்க்க அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இவையனைத்தும் தற்காலிகம் மட்டுமே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை டாடா நிறுவனம் சார்பாக வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்க்படுகின்றது.

மேலே நாம் பார்த்த டாடா கார் மாடல்களே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வாகனங்களாக இருக்கின்றன. குறிப்பாக, சஃபாரி மற்றும் நெக்ஸான் போன்ற டாடா கார்களுக்கு நாட்டில் மிக அதிகமான தேவை நீடித்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்காலிக உற்பத்தி நிறுத்தம் டாடா மோட்டார்ஸின் விற்பனையைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.

வைரஸ் பரவல் மிக ஆக்ரோஷமாக உயர்ந்து வருகின்ற காரணத்தினாலயே இத்தகைய கடுமையான நடவடிக்கையை டாடா கையிலெடுத்துள்ளது. பணியாளர்களைப் பாதுக்காக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்போதும் இல்லாத வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 422 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றது. ஒட்டுமொத்தமாக 2021 மார்ச் மாதத்தில் 29,655 வாகனங்களை நிறுவனம் விற்பனைச் செய்திருந்தது. இதில், அதிகம் நெக்ஸான் எஸ்யூவி காரே விற்பனையாகியிருக்கின்றது. இந்த ஒற்றை மாடல் மட்டுமே 8,683 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்த அமோகமான வளர்ச்சிக்கு தடை விதிக்கும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவல் தடை கல்லைப் போட்டுள்ளது. இது அடுத்த மாத சேல்ஸ் ரிப்போர்ட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகின்றது.

தற்போது இந்தியாவில் டாடா நிறுவனத்தின் சஃபாரி காருக்க எதிர்பார்த்திராத வகையில் புக்கிங் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதுமாதிரியான நல்ல வரவேற்பை முன்னிட்டு அண்மையில் புதிதாக பத்து ஷோரூம்களை நிறுவனம் தொடங்கியது. தலைநகர் டெல்லியிலும், அதன் சுற்று வட்டாரப்பகுதியை மையமாக வைத்தே இந்த புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications







