அதிகரிக்கும் டிமாண்ட்!! ஒரே நாளில் 10 புதிய ஷோரூம்களை திறந்த டாடா... மிரண்டு நிற்கும் இந்திய வாகன சந்தை!!
டாடா நிறுவனம் ஒரே நாளில் புதிதாக 10 ஷோரூம்களை திறந்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகளவு விற்பனை வளர்ச்சியை நிறுவனம் தற்போது பெற தொடங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் மாத விற்பனையில் டாடா நிறுவனம் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் கடந்த மார்ச் மாத விற்பனையில் டாடா நிறுவனம் 422 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இது மாபெரும் விற்பனை வளர்ச்சி என்பது குறிப்பிடத்தகுந்தது. 2020 மார்ச் மாதத்தில் டாடா நிறுவனம் 5,676 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது.

ஆனால், நடப்பாண்டின் மார்ச் மாதத்திலோ 29,655 யூனிட்டுகளை நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. இதேபோன்ற மிகப்பெரிய விற்பனை வளர்ச்சியையேதான் கடந்த 2021 பிப்ரவரியிலும் நிறுவனம் பெற்றிருந்தது. 2021 பிப்ரவரியில் ஒட்டுமொத்தமாக 27,224 யூனிட் வாகனங்களை டாடா விற்பனைச் செய்திருந்தது.

இவ்வாறு தொடர்ச்சியாக விற்பனை விகிதம் வளர்ச்சி அடைந்து வரும் நேரத்தில் டாடா நிறுவனம், அதிரடியாக ஒரே நாளில் பத்து புதிய ஷோரூம்களை தொடங்கியிருக்கின்றது. அனைத்து புதிய ஷோரூம்களும் தலைநகர் டில்லியைச் சுற்றியே தொடங்கப்பட்டுள்ளன.

ஏழு ஷோரூம்கள் டெல்லியிலும், இரண்டு ஷோரூம்கள் குர்காவுனிலும், ஒன்று ஃபரிதாபாத் பகுதியிலும் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த புதிய ஷோரூம்களுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்த பகுதியில் 29 டாடா கார் விற்பனையகங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன.

இந்த ஷோரூம்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. வாகனங்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மிக எளிமையான அணுகலை வழங்கும் நோக்கில் பல்வேறு சிறப்பு வசதிகளை ஷோரும்களில் டாடா வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் டாடா நிறுவனம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அண்மைக் காலங்களாக செய்து வருகின்றது. இதனடிப்படையிலேயே புதிய ஷோரூம்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, சர்வீஸ் மையங்களை அதிகரிக்கச் செய்யும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இருப்பினும், வரலாற்று சிறப்பு மிக்க செயலாக இன்றைய தினம் அமைந்திருக்கின்றது. தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் மட்டுமே இன்று ஒரே நாளில் மட்டும் பத்து புதிய ஷோரூம்களை டாடா தொடங்கியிருப்பது இந்திய வாகன சந்தையையே மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.

புதிய நவீன ஷோரூம் திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவின் துணை தலைவர் ராஜன் அம்பா, "ஆண்டு விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் ஷோரூம் விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக" தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








