இனி தரமான உதிரி பாகங்கள் வீடு தேடி வரும்... நாட்டின் 12 நகரங்களில் சேவையை தொடங்கியது டொயோட்டா...
உதிரி பாகங்களை வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் சேவையை டொயோட்டா இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் டொயோட்டாவும் ஒன்று. இந்த நிறுவனமே வீட்டுக்கே வந்து உதிரிபாகங்களை வழங்கும் சேவையை நாட்டில் தொடங்கியுள்ளது. தனது ஜென்யூன் (நேர்மையான) உதிரி பாகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த சேவையை இந்தியாவில் டொயோட்டா தொடங்கியுள்ளது.

'டொயோட்டா பார்ட்ஸ் கன்னெக்ட்' எனும் திட்டத்தின் வாயிலாக இந்த சேவையை தொடங்கியுள்ளது. சந்தையில் புழக்கத்தில் இருக்கும் போலி பாகங்களை ஒழிக்கும் பொருட்டும் இந்த சேவையை நாட்டில் டொயோட்டா தொடங்கியிருக்கின்றது.

புதிய சேவை தொடங்கியதுகுறித்து நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான நவீன் சோனி கூறியதாவது, "இந்த முயற்சியைத் தொடங்குவதன் மூலம், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் எங்கள் உறுதிப்பாட்டை நோக்கி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளோம்.

வாகனங்களின் பாதுகாப்பில் உண்மையான பாகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவேதான் எங்கள் வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் இச்சேவை இந்தியாவில் தொடங்கியுள்ளோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் மன அழுத்தமில்லாத சேவை வழங்க உதவும்" என தெரிவித்தார்.

இச்சேவையின் வாயிலாக உதிரிபாகங்கள் மட்டுமின்றி கார்களை பராமரிக்க உதவும் அத்தியாவசிய பொருட்களையும் விற்பனைச் செய்ய இருக்கின்றது. தொடர்ந்து, எஞ்ஜின் ஆயில், டயர் பேட்டரி உள்ளிட்ட பொருட்களையும் வீட்டுக்கே வந்து டொயோட்டா டெலிவரி செய்ய இருக்கின்றது.

இந்த சிறப்பு சேவையை நாட்டின் குறிப்பிட்ட 12 நகரங்களில் மட்டுமே டொயோட்டா தொடங்கியுள்ளது. நடப்பாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் டோர் டெலிவரி சேவையைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. டோர் டெலிவரி சேவையைப் பெற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தை நாட நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக அதி வேகத்தில் புக் செய்யப்படும் வாகன உதிரிபாகங்களை நிறுவனம் உரிய நேரத்தில் டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்பவும் அதன் டெலிவரிகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள சுகாதார மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை டொயோட்டா நிறுவனம் அமைக்க இருக்கின்றது. அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்து கொள்ளே இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








