பெங்களூர் அருகே ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்கும் டொயோட்டா!
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள சுகாதார மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை டொயோட்டா நிறுவனம் அமைத்து வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட உள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை இந்தியாவில் ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக, ஒரே நேரத்தில் பல்லாயிரணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் குவிந்தனர். மேலும், பலர் தீவிர நோய் பாதிப்புக்கு ஆளானார்கள். அதில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் செயற்கையாக கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஆனால், நாட்டின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியைவிட தேவை பன்மடங்கு அதிகரித்ததால், கொரோனா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கொரோனா தொற்று வேகமாக குறைந்து வந்தாலும், மூன்றாவது அலைக்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கு தக்கவாறு மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தனியார் நிறுவனங்களும் அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனம் தனது பங்களிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.
அந்த வகையில், பெங்களூர் அருகே உள்ள பிடதியில் தனது கார் ஆலை அமைந்துள்ள பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்தை ரூ.12 கோடி செலவில் கட்டடங்கள் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. மேலும், அங்கு புதிய ஆக்சிஜன் ஆலையையும் அமைத்து வருகிறது.
இந்த ஆக்சிஜன் ஆலையின் மூலமாக நாள் ஒன்றுக்கு 50 சிலிண்டர்கள் அளவுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆக்சிஜன் முழுமையாக பிடதி சமூக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டொயோட்டா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மூத்த துணைத் தலைவர் விக்ரம் குலட்டி கூறுகையில்,"மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் இந்த பெருந்தொற்று காலத்தில் உள்ளூர் மக்களின் நலனுக்கும், அவர்களது உதவி புரிவதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
முக்கியமாக சுகாதார திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எங்களது முழுமையான ஒத்துழைப்பையும், உறுதுணையாக இருப்போம்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








