உற்பத்தியில் மிக பெரிய சாதனையை படைத்த மாருதி சுஸுகி.. என்னங்க இப்படி ஒரு சாதனையை பண்ணிட்டு சைலண்டா இருக்காங்க!
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றன மாருதி சுஸுகி (Maruti Suzuki), கார் உற்பத்தியில் மிகப் பெரிய சாதனையைப் படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி என்ன சாதனையை அது படைத்து இருக்கின்றது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் (Hyundai) மற்றும் மஹிந்திரா (Mahindra) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எல்லாம் மிகப் பெரிய போட்டியாளனாக இருந்துக் கொண்டிருக்கின்றது மாருதி சுஸுகி (Maruti Suzuki), நிறுவனம். சொல்லப் போனால் கார் விற்பனையில் இந்த பிராண்டே தலைவனாக இருக்கின்றது.

ஒவ்வொரு மாதமும் விற்பனையில் இந்த பிராண்டே முன்னணியில் உள்ளது. சென்ற நவம்பர் மாதத்தில்கூட ஒட்டுமொத்தமாக 1,64,439 வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்தது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் இப்போது ஆகியிருக்கும் விற்பனையானது 50.5 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த அளவு அதீத விற்பனை வளர்ச்சி பாதையிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் பயணித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே, மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் மிகப் பெரிய சாதனையைப் படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது 3 மில்லியனாவது யூனிட் வாகனத்தை உற்பத்தி செய்து விற்பனைக்காக அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுஸுகி மோட்டார் குஜராத் உற்பத்தி ஆலையிலேயே இந்த அளவு மாபெரும் உற்பத்தி சாதனையை சுஸுகி அரங்கேற்றி இருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர் பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. பிளான்ட் ஏ, பிளான்ட் பி மற்றும் பிளான்ட் சி என மூன்று ஆலைகளை இயக்கி வருகின்றது.
இங்கு கார் உற்பத்தி பணியானது பிப்ரவரி 2017, ஜனவரி 2019 மற்றும் ஏப்ரல் 2021 ஆகிய காலகட்டத்திலேயே தொடங்கியது. சுஸுகி மோட்டார் குஜராத் ஆலையானது ஆண்டுக்கு 7.50 லட்சம் யூனிட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஆகும். இங்கு ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 200 பேர் வரை பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போதைய மூன்று மில்லியன் உற்பத்தியில் 1 மில்லியன் உற்பத்தியானது கடந்த 17 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். குஜராத் ஆலையில் வைத்து மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரபலமான கார் மாடல்கள் பலவற்றை தயாரித்துக் கொண்டிருக்கின்றது. பலேனோ, ஸ்விஃப்ட், டூர் எஸ், டிசையர், ஃப்ரான்க்ஸ் மற்றும் பல வாகனங்களை அது தயாரித்துக் கொண்டிருக்கின்றது.
மூன்று மில்லியன் உற்பத்தி திறன் என்பது மாருதி சுஸுகியின் தயாரிப்பிற்கு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் தேவையைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. சுஸுகி குஜராத் ஆலை தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களிலேயே அது ஒரு மில்லியன் உற்பத்தி எண்ணிக்கை எனும் இமாலய சாதனையை எட்டியது.
இதற்கு அடுத்தபடியாக ஐந்தாண்டுகள் மற்றும் 7 மாதங்களில் இரண்டாவது மில்லியன் வாகன உற்பத்தி எண்ணிக்கையை எட்டியது. இதைத்தொடர்ந்தே, தற்போது மூன்றாவது மில்லியன் உற்பத்தி எண்ணிக்கையை குஜராத் ஆலை எட்டி இருக்கின்றது. இது மற்ற கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் பாதுகாப்பு ரேட்டிங் விஷயத்தில் சற்று பின் தங்கியே இருக்கின்றன. இருப்பினும் இந்தியர்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு பலமாக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. பராமரிப்பு செலவு குறை மற்றும் விலையும் குறைவு என்பதாலேயே மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே இப்போதைய குஜராத் உற்பத்தி சாதனை அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









