நம் மக்களை கவர ஜப்பான் காரங்களுக்குதான் நல்லா தெரிஞ்சிருக்கு!! டொயோட்டா அதுல முக்கியமானது!
டொயோட்டா (Toyota) கடந்த 2023 நவம்பர் மாதத்தில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட எவ்வளவு அதிகம்? என்பதையும், டொயோட்டாவின் அடுத்த திட்டங்களை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஜப்பானிய நிறுவனங்களுள் ஒன்று டொயோட்டா ஆகும். இந்தியாவில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக கார்களை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. சுஸுகி உடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டுவரும் டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி கார்களை உருமாற்றம் செய்து, விற்பனை செய்து வருகிறது.

அதேநேரம், இன்னோவா, ஃபார்ச்சூனர் என சுஸுகியுடன் தொடர்பில்லாத கார்களையும் டொயோட்டா இந்தியாவில் விற்பனை செய்கிறது. கடந்த 2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 17,818 கார்களை இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2022 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார்களின் எண்ணிக்கை 11,765 ஆகும்.
இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை ஆனது சுமார் 51% அதிகரித்து உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் மிக பிரபலமான டொயோட்டா கார்கள் இன்னோவா எம்பிவி மற்றும் ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஆகும். இதில் இன்னோவாவின் 3ஆம் தலைமுறை மாடல் கடந்த 2022ஆம் ஆண்டில் இன்னோவா ஹைகிராஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் பிளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும்.

இந்த இரு டொயோட்டா கார்களின் விற்பனை இந்தியாவில் எப்போதுமே சிறப்பாக இருக்கும். அதேநேரம், 2022இல் அறிமுகம் செய்யப்பட்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் விற்பனையும் பெரியதாக குறை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த 2023ஆம் காலண்டர் ஆண்டில் மொத்தம் 2.10 லட்ச கார்களை இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ஆனால், 2022ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1.50 இலட்ச கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், டொயோட்டா கார்களின் விற்பனை ஆனது நம் நாட்டில் கிட்டத்தட்ட 40% அதிகரித்துள்ளது. இதில் இருந்து, கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அறியலாம்.

இதே புத்துணர்ச்சியுடன் இந்த 2023ஆம் காலண்டர் ஆண்டை நிறைவு செய்யும் முனைப்பில் டொயோட்டா உள்ளது. மேற்கூறப்பட்ட கார்கள் மட்டுமின்றி, கிளான்ஸா, ரூமியான், காம்ரி ஹைப்ரீட் மற்றும் வெல்ஃபையர் என வேறு சில கார்களையும் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்கிறது.
இந்த கார்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முனைப்பில் உள்ள டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் புதியதாக தனது 3வது உற்பத்தி தொழிற்சாலையை நிறுவும் திட்டத்தில் உள்ளது. ரூ.3,300 கோடி முதலீட்டில் டொயோட்டாவின் இந்த புதிய தொழிற்சாலையும் கர்நாடகாவில்தான் அமைகிறது. இதன் மூலமாக, புதியதாக 2,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2022 நவம்பர் மாதத்தில் 11 ஆயிரம் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதத்தில் 3இல் ஒரு பங்கு அதிகரித்து உள்ளது. இதனை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க, புது, புது கார்களை அறிமுகம் செய்வது மட்டுமின்றி, அவற்றை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலையையும் டொயோட்டா நிறுவுகிறது.


Click it and Unblock the Notifications









