இன்னோவா, ஃபார்ச்சூனர் டெலிவரியை திடீரென நிறுத்திய டொயோட்டா.. இப்படி ஒரு சிக்கல் வரும்னு யாருமே எதிர்பாக்கல!
டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களான இன்னோவா கிரிஸ்டா (Innova Crysta), ஃபார்ச்சூனர் (Fortuner) மற்றும் ஹைலக்ஸ் (Hilux) ஆகியவற்றை விற்பனைக்காக அனுப்புவதை திடீரென நிறுத்தி இருக்கின்றது. இதனால், டீலர்களால் அக்கார் மாடல்களை புக் செய்தவர்களுக்கு டெலிவரி வழங்குவதில் சிக்கலைச் சந்திக்கத் தொடங்கி இருக்கின்றனர். டொயோட்டாவின் இந்த திடீர் செயலுக்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஒவ்வொரு வாகன உற்பத்தி நிறுவனமும் அவர்களின் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னர் சில ஆவணங்களை குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் சமர்பித்து அந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த விஷயத்திலேயே டொயோட்டா (Toyota) தற்போது சிக்கலை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் விளைவாகவே டொயோட்டா நிறுவனம் அதன் தயாரிப்பு கார்களை டீலர்களுக்கு அனுப்பி வைப்பதை நிறுத்தி வைத்து இருக்கின்றது. ஆகையால், இன்னோவா கிரிஸ்டா (Innova Crysta), ஃபார்ச்சூனர் (Fortuner) மற்றும் ஹைலக்ஸ் (Hilux) ஆகிய கார்களை டெலிவரி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.
டொயோட்டாவின் இந்த அதிரடி முடிவுக்கு பின்னால் மூன்று எஞ்சின்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. அவை குறிப்பிட்ட சான்றை பெறுவதில் சிக்கலை சந்தித்து இருக்கின்றன. மூன்று டீசல் எஞ்சின்கள் ஆகும். 2.4 லிட்டர், 2.8 லிட்டர் மற்றும் 3.3 லிட்டர் ஆகிய மோட்டார்களே சோதனை நடைமுறைகளில் சிக்கலைச் சந்தித்து இருக்கின்றன.

இந்த எஞ்சின்களே டொயோட்டாவின் பிரபலமான கார் மாடல்கள் பலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. 2.4 லிட்டர் மோட்டாரானது இன்னோவா கிரிஸ்டாவிலும், 2.8 லிட்டர் ஹைலக்ஸ் மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களிலும், 3.3 லிட்டர் லேண்ட் க்ரூஸர் மாடலிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதனால்தான், இந்த எஞ்சின்களைக் கொண்டிருக்கும் இந்த கார் மாடல்களை தற்போது விற்பனைக்காக வெளியேற்ற முடியாமல் டொயோட்டா சிக்கலைச் சந்தித்து இருக்கின்றது.
இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பான் மற்றும் பிற உலக நாடுகளிலும் இதே சிக்கலையே டொயோட்டா சந்தித்து இருக்கின்றது. மேலே பார்த்த மூன்று எஞ்சின்களும் இசியூ மெஷினில் சோதனை செய்தபோது ஓர் விதமான (சரியான) தரவுகளையும், விற்பனைக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் (கார் மாடல்களில்) பொருத்தப்பட்ட எஞ்சின்கள் வேறு விதமான (முரண்பாடான) தரவுகளையும் வழங்கி இருக்கின்றன.

இந்த நிலையிலேயே டொயோட்டா தற்போது அதிகாரப்பூர்வமாக ஓர் தகவலை வெளியிட்டு இருக்கின்றது. அதில், தங்கள் நிறுவனம் தங்களின் எஞ்சின்கள் அதிக குதிரைத் திறன், முறுக்குவிசையை வெளியேற்றும் என எந்த முறைகேடான தகவலையும் வெளியேற்றவில்லை என தெரிவித்து இருக்கின்றது. முக்கியமாக இந்த பாதிப்புகளால் பாதுகாப்பு அல்லது மாசு உமிழ்வில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அது தெரிவித்து இருக்கின்றது.
மேலும், இப்போது டெலிவரி பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும் புக்கிங்கை ஏற்கும் பணிகளை டொயோட்டா நிறுத்தவில்லை. இத்துடன், முறைகேடு இருப்பதாக கூறப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து அதை சரி செய்வதற்கான பணியிலும் டொயோட்டா ஈடுபட்டு வருகின்றது. அத்துடன், இந்த நிலைமைகுறித்து அது வாடிக்கையாளர்களிடமும் வருத்தம் தெரிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டாவின் முக்கிய தயாரிப்புகளாக டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவும், ஃபார்ச்சூனரும் இருக்கின்றன. இவற்றின் டெலிவரிகள் பணிகள் பாதிப்படைந்திருப்பதால் அதை புக் செய்து காத்திருந்தவர்கள் சற்றே அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். விரைவில் இந்த சிக்கல்களை சரி செய்து, உண்மை என்பதை வெளிக்காட்டி டொயோட்டா அதன் தயாரிப்புகளை மீண்டும் டெலிவரி செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த பணிகள் ஆரம்பிக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









