இது சும்மா ட்ரெய்லர்தான்.. மெயின் பிக்சரில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்க மாருதி சுஸூகி ரெடி
கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக மாருதி சுஸூகி நிறுவனம் அறிவித்துள்ளது. விலை எவ்வளவு உயர்கிறது? எப்போது முதல் அமலுக்கு வரும்? என்பது தொடர்பாக மாருதி சுஸூகி நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக மாருதி சுஸூகி நிறுவனம் அறிவித்துள்ளது. விலை எவ்வளவு உயர்கிறது? எப்போது முதல் அமலுக்கு வரும்? என்பது தொடர்பாக மாருதி சுஸூகி நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சமீப காலமாக கார்களின் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. ஹோண்டா, ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவன கார்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, கார்களின் மாடல்களை பொறுத்து, குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படும் என கடந்த ஜூலை மாத தொடக்கத்திலேயே அறிவித்து விட்டது.

இதனை தொடர்ந்து தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், கிராண்ட் ஐ10 காரின் விலையை 3 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது. அதற்கு முன்னதாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா எஸ்யூவி காரை தவிர, சில கார்களின் விலையை, கடந்த ஜூன் மாதமே ஹூண்டாய் உயர்த்தி விட்டது.

ஹோண்டா மற்றும் ஹூண்டாயை தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனமும் கார்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி ரூ.30 ஆயிரம் வரை அல்லது 2 சதவீதம் என்ற அடிப்படையில், கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக, மஹிந்திரா திடீரென அறிவித்தது.

கார் உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றான இரும்பின் விலை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கார் உற்பத்தி செலவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அத்துடன் போக்குவரத்து செலவுகளும் உயர்ந்து வருகின்றன.

எனவேதான் முன்னணி நிறுவனங்கள், கார்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், மாருதி சுஸூகி நிறுவனமும், தங்கள் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

ஆனால் எவ்வளவு விலை உயர்த்தப்படும்? என்ற தகவல் தற்போதைக்கு வெளியாகவில்லை. விலையை எந்த அளவிற்கு உயர்த்த வேண்டும்? என்பது தொடர்பாக ஆய்வு செய்யும் பணியில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஃபைனான்ஸ் டீம் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆய்வு பணியை மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஃபைனான்ஸ் டீம் நிறைவு செய்த பிறகு, கார்களின் விலை எவ்வளவு உயர்த்தப்படும்? என்பதை மாருதி சுஸூகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. ஆனால் கார்களின் மாடல்களை பொறுத்து விலை உயர்வு வேறுபடலாம்.

மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது இந்தியாவில், ரூ.2.51 லட்சம் முதல் (என்ட்ரி லெவல் ஆல்டோ 800) ரூ.11.51 லட்சம் வரையிலான (மிட் சைஸ் செடான் சியாஸ்) கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இதனிடையே 2018ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான மாருதி சுஸூகி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் நேற்று (ஆகஸ்ட் 1) வெளியானது. மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,64,369 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில், மாருதி சுஸூகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,65,346 கார்களை விற்பனை செய்திருந்தது. அதாவது 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாருதி சுஸூகி நிறுவன கார்களின் விற்பனை 0.6% சரிவடைந்துள்ளது.

விற்பனை சரிவடைந்துள்ள நிலையில், கார்களின் விலையை உயர்த்த மாருதி சுஸூகி முடிவு செய்துள்ளது. உற்பத்தி செலவு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்த முடிவை எடுத்திருப்பதாக மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இந்த மாதம் முதலே நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








