முற்றிலும் புதிய தளத்துக்கு மாறும் டாடா நெக்ஸான்... அடுத்த தலைமுறையில் என்னென்ன மாற்றங்கள்?
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவியாக வலம் வரும் டாடா நெக்ஸான், புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த புதிய தலைமுறை டாடா நெக்ஸான் கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த புதிய டாடா நெக்ஸான் கார் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வசதிகள், சிறப்பம்சங்களிலும் இது சிறப்பான மாடலாக மேம்படுத்தப்படுகிறது. இதனால் வடிவமைப்பு முதல் தொழில்நுட்பம், இடவசதி மற்றும் ஓட்டுனர் அனுபவம் உள்ளிட்ட பல விஷயங்களில் பல்வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

(Tata Nexon - Current Gen Model Image)
தற்போதைய நெக்ஸான் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டிருந்தாலும், அடுத்த தலைமுறை மாடலில் டாடா கார்ஸ் நிறுவனம் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. குறிப்பாக, ATLAS என அழைக்கப்படும் டாடாவின் புதிய தலைமுறை கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே கட்டமைப்பில் டாடா கர்வ் கார் உருவாக்கப்பட்டது. எனவே, இந்த தளத்தை அடிப்படையாகக் கொண்டு காரின் கட்டமைப்பு, எடை, பாதுகாப்பு மற்றும் கேபின் என அனைத்து அம்சங்களிலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
நான்கு பவர்டிரெயின் தேர்வுகள்
புதிய நெக்ஸான் காரில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என நான்கு விதமான தேர்வுகளை டாடா தொடர்ந்து வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே எஸ்யூவி மாடலில் வெவ்வேறு எரிபொருள் தேவைகளுக்கு ஏற்ப இத்தனை தேர்வுகளை வழங்குவது நெக்ஸானுக்கு முக்கிய பலமாக இருக்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்கால மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படலாம். அதே நேரத்தில், சிஎன்ஜி மாடலுக்கும் டாடா அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நெக்ஸான் iCNG-யில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறையிலும் இன்னமும் மேம்படுத்தப்படும் என தெரிகிறது.
புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக்
புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிலும் பல புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பேட்டரி திறன், மின்மோட்டார் செயல்திறன் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் செல்லக்கூடிய தூரம் ஆகியவற்றில் சிறப்பாக மேம்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நெக்ஸான் எலெக்ட்ரிக் காரைவிட அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய தலைமுறை மின்சார எஸ்யூவி உருவாகும் வாய்ப்பு உள்ளது.
புதிய தளத்துக்கு மாறுவதால் காரின் உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரலாம். அதிக கேபின் இடவசதி, புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, பெரிய திரைகள், மேம்பட்ட கனெக்டெட் கார் வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் இவை தொடர்பான முழுமையான விவரங்களை டாடா மோட்டார்ஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
தோற்றத்திலும் மாற்றம்?
சோதனையின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் புதிய தலைமுறை நெக்ஸான் கார், தற்போதைய ஒட்டுமொத்த டிசைனை ஒத்திருந்தாலும், அதிக அளவில் கவர்ச்சிக்கான சிறப்பம்சங்களுடன் வடிவமைப்பு மாற்றங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். மேலும், பிரிமீயமான அம்சங்களை இந்த கார் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலமாக, எஸ்யூவி மார்க்கெட்டில் தனது வலுவான விற்பனையை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து அம்சங்களையும் புதிய தலைமுறை டாடா நெக்ஸான் பெற்றிருக்கும் என நம்பலாம். அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


